முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட சிகை அலங்கார கடை உரிமையாளர்களுக்கான கலந்துரையாடல் ஒன்று இன்றையதினம் (15.05.2026) புதுக்குடியிருப்பு பிரதேச சபை மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது.
இறுதி யுத்தத்தின் போது உயிரிழந்த உறவுகளை நினைவு கூர்ந்து இரண்டு நிமிட அஞ்சலி செலுத்தப்பட்டு கலந்துரையாடல் ஆரம்பமானது.
குறித்த கலந்துரையாடலில் பாடசாலை மாணவர்களுக்கு முடி வெட்டுவது தொடர்பாகவும், சமூகத்தில் பாடசாலை மாணவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினை தொடர்பாகவும், அழகக சங்க உரிமையாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அதற்கான தீர்வுகளும் கலந்துரையாடல் மூலம் எட்டப்பட்டிருந்து.
அழகக உரிமையாளர்கள் பாடசாலைக்கு ஏற்ப மாணவர்களுக்கு தலைமுடி வெட்டுவது தொடர்பாக ஏற்றுக்கொள்வதாக உடன்பட்டிருந்ததுடன், பாடசாலைகளில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு கலந்துரையாடல் ஒன்று மேற்கொள்வதாக அதிபர்களால் இதன்போது கூறப்பட்டிருந்தது.
புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் தவிசாளர் வேலாயுதம் கரிகாலன் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் புதுக்குடியிருப்பு கோட்டக்கல்வி பணிப்பாளர் விஸ்வலிங்கம் விஷ்ணுகரன், முல்லைத்தீவு மாவட்ட அழகக கூட்டுறவு சங்கத்தின் தலைவர் வெ.றொபின்சன், புதுக்குடியிருப்பு பிரதேச அழகக சங்கத்தின் தலைவர் ம.யோகதாஸ், அழகக சங்கங்களின் உறுப்பினர்கள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், புதுக்குடியிருப்பு பிரதேச சிகை அலங்கார கடை உரிமையாளர்கள், புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.














