அரசின் ஊழல் மற்றும் நிர்வாகச் சீர்கேடுகளின் சுமையை அப்பாவி மக்கள் மீது சுமத்தக் கூடாது என்று பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான சட்டத்தரணி உதய கம்மன்பில காட்டமாகத் தெரிவித்தார்.
பத்தரமுல்லையில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டு எதிர்க்கட்சிகளின் விசேட ஊடக சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
எரிபொருள் இறக்குமதியால் ரூபாயின் மதிப்பு வீழ்ந்துள்ளது என்று ஜனாதிபதி கூறுவது ஒரு ‘பச்சைப்பொய்’ என்றும் கம்மன்பில சாடினார்.
“தரம் குறைந்த நிலக்கரியை இறக்குமதி செய்ததால் நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம் முடங்கியது. அந்தப் பற்றாக்குறையை ஈடுகட்டவே அதிக விலைக்கு டீசல் வாங்கப்பட்டது.” – என்றும் அவர் குறிப்பிட்டார்.
உலகிலேயே எரிபொருளுக்கு அதிக விலை கொடுத்த நாடு இலங்கைதான் என எச்.எஸ்.பி.சி. வங்கி தரவுகள் கூறுவதைச் சுட்டிக்காட்டிய அவர், விநியோகஸ்தர்களுக்கு அதிக இலாபம் வழங்கியது ஏன்? என்றும் வினவினார்.
“அதிகாரிகளின் ஊழலால் ஏற்பட்ட இழப்பை மக்கள் மீது சுமத்தாமல், அந்தப் பணத்தை அரசு தனது ‘பெலவத்தை கணக்கிலிருந்து’ (கட்சி நிதி) ஈடு செய்ய வேண்டும்” என்றும் அவர் சவால் விடுத்தார்.
தற்போது நிலவும் கடும் மழை மற்றும் வெள்ள அபாயத்தைக் கருத்திற்கொண்டு, பிள்ளைகளின் பாதுகாப்புக்காகப் பாடசாலைகளுக்கு உடனடியாக விசேட விடுமுறை வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் அரசை வலியுறுத்தினார்.
ஜனாதிபதி அநுரகுமார மற்றும் ரில்வின் சில்வா ஆகியோர் நீதிமன்றத் தீர்ப்புகள் குறித்து முன்கூட்டியே கருத்துத் தெரிவிப்பது சட்டத்தின் ஆட்சியைச் சீரழிக்கின்றது என்றும் கம்மன்பில குற்றம் சாட்டினார்.
“நீதிமன்றத்தின் மீதான இந்த அரசியல் அச்சுறுத்தல் குறித்து, அனைத்து வெளிநாட்டுத் தூதரகங்களுக்கும் சர்வதேச அமைப்புகளுக்கும் ஆதாரங்களுடன் விளக்கமளிக்கவுள்ளோம்.” என்றும் உதய கம்மன்பில இந்த ஊடகச் சந்திப்பில் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.










