நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் இன்று 14 ஆம் திகதி காலை முதல் கடும் மழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக மலையக பகுதியில் உள்ள அனைத்து நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் வெகுவாக உயர்ந்து வருகிறது.
குறிப்பாக மேல் கொத்மலை, லக்சபான, பொல்பிட்டிய, நவலக்சபான, கலுகல, விமலசுரேந்திர, கென்யோன், புரோட்லேன்ட் ஆகிய நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் வெகுவாக உயர்ந்து வருகிறது.
அத்துடன் மவுசாக்கலை, காசல்ரீ ஆகிய நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதன் கொள்ளளவை விட இன்னும் 39 அடியும், 28 அடியும் நிறைய உள்ளன.
கன மழை பெய்து வருவதால் காட்மோர் ஓயா, மரே ஓயா, சியத்தலகங்குல ஓயா, சாமிமலை ஓயா என்பவற்றில் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது. அத்துடன் மறே நீர்வீழ்ச்சி, காட்மோர் நீர்வீழ்ச்சி, மோகினி எல்ல நீர்வீழ்ச்சி மற்றும் லக்சபான நீர்வீழ்ச்சி ஆகியவற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அப் பகுதிக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
மேலும் கனமழை பெய்து வரும் வேளையில் காட்டாறு பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும் ஆறுகளில் நீராட வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் பனி மூட்டம் நிலவுகிறது. இதன் காரணமாக ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியிலும் ஹட்டன் – கண்டி பிரதான வீதியிலும் ஹட்டன் – கொழுப்பு பிரதான வீதியிலும் மற்றும் மஸ்கெலியா – நோட்டன் பிரதான வீதியிலும் அதிக அளவில் பனி மூட்டம் நிலவுகிறது. அத்துடன் கன மழை பெய்து வருவதால் வாகன சாரதிகள் மிகவும் அவதானமாக வாகனங்களை செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
வாகனங்களில் உள்ள மின்குமிழ்களை மிளிரச் செய்து வாகனங்களை ஓட்டி செல்லுமாறு நுவரெலியா மாவட்ட போக்குவரத்து பிரிவின் அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.










