நாட்டின் வெவ்வேறு பகுதிகளில், நேற்று ஞாயிற்றுக்கிழமை (10) இடம்பெற்ற விபத்துக்களில் நால்வர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அதன்படி, யட்டியாந்தோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் – கொழும்பு வீதியின் கபுலுமுல்ல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் யட்டியாந்தோட்டை – பருஸ்ஸெல்ல பகுதியைச் சேர்ந்த 59 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
கரவனெல்ல நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி, எதிரே வந்த பேருந்துடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த முச்சக்கரவண்டி சாரதியும், பின்னால் பயணித்த 14 வயது சிறுவனும் கரவனெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும் சிகிச்சை பலனின்றி சாரதி உயிரிழந்தார்.
விபத்துடன் தொடர்புடைய பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, கேகாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொழும்பு – கண்டி பிரதான வீதியின் பல்லபான பகுதியில் இடம்பெற்ற விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளதாக கேகாலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் ஹேம்மாத்தகம பகுதியைச் சேர்ந்த 59 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த லொறியொன்றின் பின்னால் வந்த முச்சக்கரவண்டி, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து லொறியுடன் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த சாரதி மற்றும் பின்னால் பயணித்த நபர் கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், பின்னால் பயணித்தவர் உயிரிழந்தார்.
உயிரிழந்தவரின் சடலம் கேகாலை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, கொழும்பு பொரளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வார்ட் பிளேஸ் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பொரளை சந்தி நோக்கி பயணித்த கார் ஒன்று, வீதியைக் கடக்க முயன்ற பாதசாரி மீது மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் ஹபரணை பகுதியைச் சேர்ந்த 52 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
விபத்துடன் தொடர்புடைய காரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன், இறக்குவானை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாதம்பை – தெனியாய வீதியின் ஹெந்தரலிய பகுதியில் உழவு இயந்திரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இறக்குவானை நோக்கி பயணித்த உழவு இயந்திரத்தின் கொக்கி உடைந்ததால், கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்துள்ளது.
விபத்தில் உழவு இயந்திரத்தின் சாரதி மற்றும் அதில் பயணித்த நால்வர் காயமடைந்து இரக்குவானை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக கஹவத்தை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.
உயிரிழந்தவர் இறக்குவானை பகுதியைச் சேர்ந்த 68 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
இந்த விபத்துக்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.










