இலங்கை மற்றும் வியட்நாம் நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்புகளை மேம்படுத்துவது தொடர்பான முக்கிய கலந்துரையாடல் நேற்றுமுன்தினம் கொழும்பில் நடைபெற்றது.
கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில், இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஏயார் வைஸ் மார்ஷல் (ஓய்வுபெற்ற) சம்பத் துய்யகொந்தா மற்றும் வியட்நாமின் துணைப் பிரதமரும் பாதுகாப்பு அமைச்சருமான ஜெனரல் பான் வான் ஜியாங் தலைமையிலான உயர்மட்டக் குழுவினர் கலந்துகொண்டனர்.
இலங்கைக்கு வியட்நாம் அரசு வழங்கி வரும் தொடர்ச்சியான ஆதரவு மற்றும் ஒத்துழைப்புக்காக பாதுகாப்பு செயலாளர் தனது நன்றியைத் தெரிவித்தார்.
இரு நாடுகளுக்கும் பொதுவான பாதுகாப்பு நலன்கள் சார்ந்த விடயங்களில் இலங்கையின் பாதுகாப்புத் துறையுடன் இணைந்து பணியாற்ற வியட்நாம் உறுதிபூண்டுள்ளது என்று ஜெனரல் ஜியாங் இதன்போது தெரிவித்தார்.
இலங்கையின் தற்போதைய முன்னேற்றங்களுக்கு வாழ்த்துத் தெரிவித்த வியட்நாம் தூதுக்குழுவினர், பிராந்தியப் பாதுகாப்பை உறுதிப்படுத்த இலங்கைக்கு முழுமையான ஆதரவை வழங்கத் தயார் என்று மீண்டும் வலியுறுத்தினர்.
இந்தச் சந்திப்பில் வியட்நாம் தரப்பில் அந்நாட்டின் வெளிநாட்டு உறவுகள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் லெப்டினன்ட் ஜெனரல் வு தான் வான் உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகளும், இலங்கை தரப்பில் பாதுகாப்பு அமைச்சின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் மற்றும் இராணுவ இணைப்பு அதிகாரி உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
பிராந்திய ரீதியில் பாதுகாப்பு மற்றும் இராஜதந்திர ரீதியான ஒரு பலமான கூட்டாண்மையை உருவாக்குவதற்கு இந்தச் சந்திப்பு ஒரு முக்கிய அடித்தளமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.










