ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனவின் மரணத்துக்கு முன்னர், விசாரணை அதிகாரிகளால் அவர் கடும் அச்சுறுத்தலுக்கும் அழுத்தங்களுக்கும் உள்ளாக்கப்பட்டார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ பகிரங்கமாகக் குற்றம் சுமத்தினார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராகப் போலி வாக்குமூலங்களை வழங்குமாறு கபில சந்திரசேனவுக்குப் புலனாய்வுப் பிரிவினர் கடும் அழுத்தம் கொடுத்தனர் என்றும் நாமல் ராஜபக்ஷ இதன்போது தெரிவித்தார்.
விசாரணை அதிகாரிகளின் தேவைக்கேற்ப வாக்குமூலங்களைப் பெறத் தவறினால், சிறையில் அடைக்கப்படுவார் என அவர் அச்சுறுத்தப்பட்டார் என்றும், இதனால் அவர் பாரிய மன உளைச்சலுக்கு ஆளானார் என்றும் நாமல் குறிப்பிட்டார்.
அரசு தனது அரசியல் தேவைகளுக்காகப் பொலிஸார் மற்றும் புலனாய்வு அமைப்புகளைத் தவறாகப் பயன்படுத்துகின்றது என்று குற்றம் சுமத்திய அவர்,
“குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் பாரபட்சமின்றி விசாரிக்கப்பட வேண்டும். ஆனால், விசாரணைகளின் போது அச்சுறுத்தல், மிரட்டல் அல்லது பலவந்தமான முறையில் வாக்குமூலங்களைப் பெறுவது சட்டவிரோதமானது.
நிர்வாக அமைப்புகள் அரசியல் மயப்படுத்தப்படுவதன் மூலம் நீதியான விசாரணைகள் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளன.” – என்றும் மேலும் கூறினார்.










