ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனவின் மரணம், இலங்கையின் அரசியல் மற்றும் வர்த்தக கலாச்சாரத்தின் இருண்ட பக்கத்தைப் பிரதிபலிக்கின்றது என்று நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர தெரிவித்தார்.
நேற்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனைக் கூறினார்.
கபில சந்திரசேனவை ஸ்ரீலங்கா டெலிகொம் காலத்தில் இருந்தே தமக்குத் தெரியும் எனக் குறிப்பிட்ட திலித் ஜயவீர, “அவர் ஒரு திறமையான நிர்வாக அதிகாரி. ஆனால், துரதிர்ஷ்டவசமாக இந்த நாட்டின் அரசியல் மற்றும் வர்த்தகங்களுக்கு இடையிலான மறைமுகத் தொடர்புகளுக்குள் அவர் சிக்கிக்கொண்டார்” என்றும் தெரிவித்தார்.
கபில சந்திரசேன போலிப் பிணையாளர்களைப் பயன்படுத்தி பிணை பெற்றார் எனக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் அவருக்குப் பெரும் மன அழுத்தத்தைக் கொடுத்திருக்கும் என்றும் திலித் ஜயவீர சுட்டிக்காட்டினார்.
“இறுதியில் ஒரு மனிதன் தனிமைப்படுத்தப்படும் போது, அவரிடம் இருந்து நன்மைகளைப் பெற்ற எவருமே அவருக்கு ஆதரவாக நிற்பதில்லை. பிணை எடுப்பதற்குக்கூட ஒருவரை அவரால் தேடிக்கொள்ள முடியாமல் போனது ஒரு கசப்பான பாடம்” என்றும் அவர் விசனம் தெரிவித்தார்.
ஒருவர் மீதான குற்றம் நிரூபிக்கப்படும் முன்னரே, அவரை விளக்கமறியலில் வைப்பதையே தண்டனையாக மாற்றும் தற்போதைய சட்ட முறையை அவர் விமர்சித்தார்.
“குற்றம் நிரூபிக்கப்படும் வரை அனைவரும் நிரபராதிகளே” என்ற தார்மீகப் பண்பு இலங்கையின் தற்போதைய அமைப்பில் வலுவிழந்து வருகின்றது என்றும் அவர் சாடினார்.
கபில சந்திரசேனவின் மரணம் முதற்கட்டமாக தற்கொலை எனத் தெரிந்தாலும், அது குறித்து முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் திலித் ஜயவீர வலியுறுத்தினார்.
அண்மையில் உயிரிழந்த திறைசேரி அதிகாரி ரங்க ராஜபக்ஷவின் மரணம் போன்றே, இதிலும் பல மர்மங்கள் ஒளிந்திருக்கின்றன என்றும் அவர் சந்தேகம் வெளியிட்டார்.
அரசியல் அமைப்புகளுடன் தொடர்புகளைப் பேணும் அதிகாரிகள் மற்றும் வர்த்தகர்களுக்கு இது ஒரு எச்சரிக்கை மணி என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.










