இனவாதத்தைத் தூண்டி நாட்டைப் பிளவுபடுத்த எத்தனித்தால், சிங்கள மக்கள் அதற்குப் பாடம் புகட்டுவார்கள் என்று ஜனசெத பெரமுன கட்சியின் தலைவர் பத்தரமுல்ல சீலரத்ன தேரர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
யாழ்ப்பாணத்தை ஆளுவதற்கு தமிழக நடிகர் விஜயை, நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா அழைப்பதானது சிங்கள மக்களின் பொறுமையைச் சோதிக்கும் செயல் என்றும் அவர் சாடினார்.
“முப்பது வருட கால யுத்தத்தில் முப்படைகளும் உயிரைப் பணயம் வைத்தே வடக்கை மீட்டெடுத்தன. அந்த இருண்ட காலத்தை மீண்டும் உருவாக்க முற்பட வேண்டாம். சிங்கள மக்கள் வீதிக்கு இறங்கினால் எவரும் தப்ப முடியாது” என்றும் அவர் காட்டமாகத் தெரிவித்தார்.
மத்திய வங்கியின் உதவிப் பணிப்பாளர் ஒருவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார் என்று நாடாளுமன்றத்தில் வெளியாகும் செய்திகள் அதிர்ச்சியளிப்பதாகக் குறிப்பிட்ட தேரர், இது உண்மையானால் அரசு உடனடியாகப் பதிலளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இது 1988, 1989 காலப்பகுதியின் அடக்குமுறைகளை நினைவுபடுத்துவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அரசின் நிர்வாகச் சீர்கேடுகள் குறித்து அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
“மூன்று வேளை உண்ட மக்கள் இன்று இரண்டு வேளை மட்டுமே உண்ணும் அவலநிலை கிராமங்களில் ஏற்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்களின் விலை வானைத் தொடுகின்றது.
ராஜபக்ஷக்களின் பணம் உகாண்டாவில் இருப்பதாகக் கூறியவர்கள், இப்போது ஏன் அதை மீட்க நடவடிக்கை எடுக்கவில்லை?
தேர்தல் காலத்தில் வாக்குறுதி அளித்தபடி இளைஞர்களுக்கோ, பல்கலைக்கழக மாணவர்களுக்கோ வேலைவாய்ப்புகள் வழங்கப்படவில்லை.
சிங்களப் புத்தாண்டு போன்ற கலாச்சார நிகழ்வுகளைப் புறக்கணிக்கும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, கோயில்களுக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபடுகின்றார். மக்களின் வரிப்பணத்தில் வாழ்பவர்கள் இன்று மக்களின் இரத்தத்தையே உறிஞ்சிக் குடிக்கின்றார்கள்.” – என்றும் அவர் சாடினார்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் சிறையில் இருக்க வேண்டியவர்கள் இன்று வெளியில் உலவுகின்றார்கள் என்றும், அரசு சிங்கள மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதில்லை என்றும் குற்றம் சுமத்திய சீலரத்ன தேரர், பல்கலைக்கழக மாணவர்களுடன் இணைந்து அரசுக்கு எதிராகப் போராடப் போவதாகவும் எச்சரிக்கை விடுத்தார்.










