உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு தண்டனை வழங்குவதை விரைவுபடுத்துக.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
32 பார்வைகள்

இலங்கையிலிருந்து போதைப்பொருள் அச்சுறுத்தலை முற்றாக ஒழிப்பதற்குத் தேவையான சட்டத் திருத்தங்கள் மற்றும் மறுசீரமைப்புகளை மிக விரைவாக முன்னெடுக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அதிகாரிகளுக்குக் கடும் உத்தரவு பிறப்பித்தார்.

ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற “முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயற்பாட்டுச் சபையின் கூட்டத்திலேயே அவர் இதனை வலியுறுத்தினார்.

கைப்பற்றப்படும் போதைப்பொருட்கள் மீண்டும் எக்காரணம் கொண்டும் சமூகத்துக்குள் ஊடுருவுவதைத் தடுக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி எச்சரித்தார். அவற்றைச் சட்டபூர்வமான நடைமுறைகளின் கீழ் விரைவாக அழிப்பதற்கும், போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்குத் தண்டனை வழங்கும் செயற்பாடுகளைத் துரிதப்படுத்துவதற்கும் அவர் அறிவுறுத்தினார்.

“முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயற்பாடு ஆரம்பிக்கப்பட்ட 2025 அக்டோபர் 30 முதல் இதுவரை கிடைத்துள்ள முன்னேற்றங்கள் குறித்து கூட்டத்தில் ஆராயப்பட்டது. அதன் விவரங்கள் வருமாறு,

  • கைது செய்யப்பட்டவர்கள்: ஒரு இலட்சத்து 68 ஆயிரத்து 460 சந்தேகநபர்கள்.
  • கைப்பற்றப்பட்டவை: சுமார் 5437 கிலோ கஞ்சா, 1936 கிலோ ஹெரோயின், 1991 கிலோ ஐஸ் போதைப்பொருள் மற்றும் 15 இலட்சத்திற்கும் அதிகமான போதை மாத்திரைகள்.

இந்தச் செயற்பாடு ஆரம்பிக்கப்பட்ட பின்னர் சுற்றிவளைப்புகள் 80 வீதத்தால் அதிகரித்துள்ளன என்றும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

போதைப்பொருளுக்கு அடிமையானவர்களை மீட்டெடுப்பதற்காக 2007 ஆம் ஆண்டின் 54 ஆம் இலக்க புனர்வாழ்வு (திருத்த) சட்டமூலத்தை விரைவில் அமைச்சரவையில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புனர்வாழ்வு பெற்றவர்கள் மீண்டும் போதைக்கு அடிமையாவதைத் தடுக்க சுயதொழில் பயிற்சிகள் மற்றும் மனப்பாங்கு அபிவிருத்தித் திட்டங்களை மத வழிபாட்டுத் தலங்களை மையப்படுத்தி முன்னெடுக்குமாறு ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்.

போதைப்பொருள் தொடர்பான வழக்குகளுக்காகத் தனியான நீதிமன்றத்தை நிறுவுதல் மற்றும் இரசாயனப் பகுப்பாய்வு அறிக்கைகளை விரைவாகப் பெற்று வழக்குத் தொடர்வதை துரிதப்படுத்துவது குறித்தும் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. சிறைச்சாலை நெரிசலைத் தவிர்க்க போதைப்பொருள் குற்றவாளிகள் தொடர்பான சட்ட நடவடிக்கைகளை வேகப்படுத்துமாறும் அவர் குறிப்பிட்டார்.

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து முன்னெடுக்கப்படும் போதைப்பொருள் விநியோகத்தைத் தடுக்க கல்வி அமைச்சு மற்றும் மகளிர் பணியகம் இணைந்து விசேட திட்டங்களை முன்னெடுத்து வருவதாகவும், ஜூன் 26 சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு பாரிய விழிப்புணர்வுப் பணிகள் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் மகா சங்கத்தினர், மதத் தலைவர்கள், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், முப்படைகளின் தளபதிகள் மற்றும் பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

‘மலையகத்தின் பெருந்தலைவர்’ அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தினம் இன்று!

‘மலையகத்தின் தந்தை’ என போற்றப்படும் பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தின நினைவேந்தல் இன்று (30) அனுஷ்டிக்கப்படுகிறது. 1913ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்…

63 0 0
இலங்கை செய்திகள்

BMICH இல் பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! – காரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி மீட்பு

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளச்…

61 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாண கல்வித்துறையில் உள்ள சவால்கள் தொடர்பில் ஆளுநர் தலைமையில் விசேட கலந்துரையாடல்

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம் மற்றும் அதிபர் சேவைச் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் நேற்று சனிக்கிழமை மாலை…

59 0 0
இலங்கை செய்திகள்

இனவாத மோதலைத் தூண்டுவோருக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை! – அமைச்சர் நளிந்த எச்சரிக்கை!!

இனங்களுக்கிடையே பிளவுகளையும் இனவாத மோதல்களையும் தூண்டும் நோக்கில், தேசியக் கொடி தொடர்பில் தவறான தகவல்களைப் பரப்பி வருபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார…

47 0 0