“எமது வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரை, ‘காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விவகாரம்’ என்பது வெறும் அரச திணைக்களங்களின் காகிதங்களில் உறங்கும் ஒரு சாதாரண கோப்புச் சார்ந்த விடயமல்ல. இது ஆயிரக்கணக்கான குடும்பங்களின் ஆறாத கண்ணீரோடும், பல தசாப்த கால ஏறுமாறான காத்திருப்போடும், விவரிக்க முடியாத வலியோடும் பின்னிப்பிணைந்த ஓர் அதிஉணர்வுபூர்வமான மனிதாபிமானப் பிரச்சினையாகும். அந்த உணர்வோடு அதை அணுக வேண்டும்.” – என்று வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.
காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தால் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் விழிப்புணர்வு வேலைத்திட்டம், வடக்கு மாகாண ஆளுநரின் தலைமையில் நேற்று வியாழக்கிழமை மாலை கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் திறன் விருத்தி நிலையத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொண்டு விசேட அதிதியாக உரையாற்றும் போதே ஆளுநர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வில் காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் தலைவர் மகேஷ் கட்டுலந்த ‘சூம்’ தொழில்நுட்பத்தின் ஊடாக இணைந்துகொண்டு வரவேற்புரையை நிகழ்த்தியதுடன், இந்த விழிப்புணர்வு வேலைத்திட்டத்தின் நோக்கத்தையும் முக்கியத்துவத்தையும் தெளிவுபடுத்தினார்.
அதனைத் தொடர்ந்து, நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார நிகழ்வுக்கு அனுப்பி வைத்திருந்த விசேட செய்தி உத்தியோகபூர்வமாகச் சமர்ப்பிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து விசேட உரையாற்றிய ஆளுநர் மேலும் தெரிவிக்கையில்,
“போரால் மிக நீண்டகாலமாகப் பேரழிவுகளைச் சந்தித்த வடக்கு, கிழக்கு மாகாணங்களைப் பொறுத்தவரை, ‘நிலைமாறுகால நீதிப் பொறிமுறை’ என்பது மிக முக்கியமானதொரு பேசுபொருளாகும். ஒருவர் உயிரிழந்தால் ஏற்படும் வலியை விட, அவர் எங்கு இருக்கின்றார், என்ன ஆனார் என்றே தெரியாமல் ‘காணாமல் ஆக்கப்படுவதால்’ ஏற்படும் வலி பல மடங்கு கொடியது. என்றாவது ஒரு நாள் தமது உறவு வாசற்கதவைத் தட்டிவிட மாட்டார்களா என்ற நம்பிக்கையில் காத்திருக்கும் அந்தக் குடும்பங்களின் வலியை, அவர்களைத் தவிர வேறு எவராலும் முழுமையாக உணர்ந்து கொள்ள முடியாது.
நிலைமாறுகால நீதிப் பொறிமுறையில், ஏனைய அலுவலகங்கள் இழப்பீடுகளை வழங்குவது மற்றும் இவ்வாறான சம்பவங்கள் மீள நிகழாமையை உறுதிப்படுத்துவது போன்ற கட்டமைப்புச் சார்ந்த விடயங்களைக் கையாளுகின்றன. ஆனால், இந்தக் காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் மாத்திரமே மனித உயிர்களுடனும், உணர்வுகளுடனும் நேரடியாகத் தொடர்புபடும் தளத்தில் இயங்குகின்றது. இந்த வேறுபாட்டையும் இதன் ஆழத்தையும் அதிகாரிகள் முழுமையாகப் புரிந்துகொண்டால்தான், இன்றைய இந்த விழிப்புணர்வுச் செயலமர்வின் உண்மையான நோக்கத்தை உங்களால் உள்வாங்க முடியும்.
காணாமல் ஆக்கப்பட்டோருக்கு என்ன நடந்தது என்பதைக் கண்டறிந்து, அந்தக் குடும்பங்களுக்குரிய நீதியைப் பெற்றுக்கொடுக்கும் பொறிமுறை ஒருபுறம் சுயாதீனமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. ஆனால், அதற்குச் சமாந்தரமாக, எமது நிர்வாகக் கட்டமைப்பு இந்தக் குடும்பங்களுக்கு ஆற்ற வேண்டிய கடமைகளைச் சரிவரச் செய்துள்ளதா என நாம் ஒருகணம் சுய பரிசோதனை செய்து பார்க்க வேண்டும்.
துயரங்களால் துவண்டுபோய் எமது அரச அலுவலகங்களின் படிகளை நாடி வரும் அந்த மக்களை, நாம் அவர்களுக்குரிய கௌரவத்துடன் நடத்தினோமா? அவர்களின் தேவைகளைச் சிரமேற்கொண்டு பூர்த்தி செய்தோமா? அல்லது ‘பனையால் விழுந்தவனை மாடேறி மிதித்த கதையாக’, ஏற்கனவே பெருந்துயரில் தவிக்கும் அந்த உறவுகளை நாமும் அலைக்கழித்து, அதிகாரத்தின் இறுமாப்புடன் அலட்சியப்படுத்தியிருக்கின்றோமா?
இந்தக் குற்றச்சாட்டை நான் அனைத்து அதிகாரிகள் மீதும் ஒட்டுமொத்தமாகச் சுமத்தவில்லை. ஆனால், அவர்களுக்கு உதவும் விடயத்தில்கூட எமது அதிகாரிகளிடத்தில் ஒருமித்த, மனிதாபிமானமிக்க நிலைப்பாடொன்று இன்னமும் முழுமையாக உருவாகவில்லை என்றே நான் கருதுகின்றேன்.
நீதியைத் தேடும் பொறிமுறை ஒருபுறம் தொடரும் அதேவேளை, அந்தக் குடும்பங்களின் அன்றாடப் பொருளாதார இருப்புக்காகக் கிடைக்க வேண்டிய காணாமல் ஆக்கப்பட்டவரின் ஓய்வூதியம், ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதி உள்ளிட்ட கொடுப்பனவுகளை எவ்வித தாமதமுமின்றிப் பெற்றுக்கொடுக்க எமது அதிகாரிகள் முன்னின்று உழைக்க வேண்டும்.
நிர்வாகச் சேவையில் பல தசாப்த கால அனுபவமுள்ளவன் என்ற அடிப்படையில், காலம் கடந்த இறப்புக்களைப் பதிவு செய்வதில் பதிவாளர்கள் எதிர்கொள்ளும் நடைமுறைச் சிக்கல்களை நான் நன்கு அறிவேன். ஆனால், ஒருவரைக் காணாமல் போனவராக அல்லது ‘இறந்தவராகக் கருதி’, அவருக்கான சான்றிதழைப் பதிவு செய்வதற்குக் காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் ஊடாக உள்ள வாய்ப்புகளை எமது அதிகாரிகள் எந்தளவுக்குப் பயன்படுத்தியிருக்கின்றார்கள் என்ற கேள்வி என்னுள் எழுகின்றது.
காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் புலன் விசாரணைகள் மற்றும் பரிந்துரைகளின் அடிப்படையில் பதிவாளர்கள் இதனை மிக இலகுவாக மேற்கொள்ள முடியும். இதற்கு மேலதிகமாகக் காணாமல் ஆக்கப்பட்டுள்ளார் என்ற சான்றிதழைக் கூடப் பெற்றுக்கொள்ள முடியும் என்ற தகவலையும் இங்கு முன்வைக்கின்றேன்.
இங்கே ஒன்றை நாம் மிகத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். சிலர் தமது குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக, ‘இறந்தவராகக் கருதும் சான்றிதழை அல்லது காணாமல் ஆக்கப்பட்டுள்ளார் சான்றிதழை’ பெற்றுக்கொண்டால், காணாமல் ஆக்கப்பட்டவர்களைத் தேடும் நடவடிக்கைகளோ அல்லது உண்மையை அறியும் செயன்முறையோ அத்துடன் முடங்கிவிடும் எனத் தவறான வதந்திகளைப் பரப்பி, மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளனர். இது முற்றிலும் தவறானது. நிர்வாகத் தேவைகளுக்காகவும், நன்மைகளைப் பெறுவதற்காகவும் இச்சான்றிதழைப் பெற்றுக்கொள்வதால், நீதியை நோக்கிய விசாரணைகளோ தேடல்களோ ஒருபோதும் நிறுத்தப்படமாட்டாது. அவை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என்பதை நீங்கள் மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும்.
அடுத்து, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில், குறிப்பாக வடக்கில் செம்மணி உள்ளிட்ட பல இடங்களில் மனிதப் புதைகுழிகள் அகழ்வு செய்யப்பட்டு வருகின்றன. காணாமல் ஆக்கப்பட்டோருக்கும் இந்தப் புதைகுழிகளுக்கும் இடையிலான தொடர்புகளை காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் சட்டரீதியாகக் கையாளுவதற்கு அப்பால், எமது நிர்வாக அதிகாரிகளுக்கு இதில் ஒரு பாரிய பொறுப்பு உள்ளது. குறித்த புதைகுழிகள் உள்ள பிரதேசங்களின் புவியியல் அமைவு, சூழல், மற்றும் அந்தப் பகுதிகளில் நீண்டகாலமாக வசிக்கும் மக்களின் சாட்சியங்கள் ஊடான கடந்தகால நிலைமைகளை முறையாக ஆவணப்படுத்தி, நீதிமன்ற நடவடிக்கைகளுக்குச் சமர்ப்பிக்கும் பெரும் பொறுப்பு கிராம அலுவலர்களுக்கும் பிரதேச செயலாளர்களுக்கும் உரியது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக இதுவரையில் அது திருப்திகரமான முறையில் அறிக்கையிடப்படவில்லை என்றே கருதுகின்றேன். இது தொடர்பில் காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் உங்களுக்கு மேலதிகத் தெளிவுபடுத்தல்களை வழங்கும் என நம்புகின்றேன்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தற்போதைய அரசு, காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் செயற்பாடுகளுக்கோ அல்லது புதைகுழி அகழ்வு நடவடிக்கைகளுக்கோ எவ்விதத் தடைகளையும் ஏற்படுத்தவில்லை. மாறாக, அதற்கான முழுமையான நிதி ஒதுக்கீடுகளையும் தடையின்றி வழங்கி வருகின்றது. கடந்த காலங்களில் ஆட்சியிலிருந்த எவராலும் இவ்வாறானதொரு வெளிப்படையான ஆதரவு வழங்கப்பட்டிருக்கவில்லை.
இதற்கு மிக முக்கிய காரணம், இந்த அரசில் அங்கம் வகிக்கும் பலரும் கடந்த காலங்களில் இதேபோன்று காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளைத் தேடி அலைந்தவர்கள்தான். காணாமல் ஆக்கப்படுதலின் கொடூர வலி அவர்களுக்கு மிக ஆழமாகத் தெரியும். அதனால்தான், இந்த விடயத்தில் முழுமையான நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்பதிலும், இந்தக் குடும்பங்கள் கௌரவமாக நடத்தப்பட்டு அவர்களுக்கான பொருளாதார நன்மைகள் உறுதி செய்யப்பட வேண்டும் என்பதிலும் அவர்கள் உறுதியாக இருக்கின்றார்கள்.
அரசின் இந்த நேர்மறையான நிலைப்பாட்டை, அதிகாரிகளாகிய நாம் மக்களின் நலனுக்காகச் சரிவரப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
இவ்வாறான ஒருங்கிணைப்புக் கலந்துரையாடல்களை நாம் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை நடாத்தி, எமது முன்னேற்றங்களை மீளாய்வு செய்வதுடன், நாம் எதிர்கொள்ளும் சவால்களையும் பேசித் தீர்க்க முடியும் என நான் உறுதியாக நம்புகின்றேன்.
இந்த விழிப்புணர்வுச் செயலமர்வு பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வில் ஒரு புதிய நம்பிக்கையையும், நிர்வாகத்தில் ஒரு காத்திரமான மாற்றத்தையும் ஏற்படுத்தும் என நம்புகின்றேன்.” – என்றார்.
ஆளுநரின் உரையைத் தொடர்ந்து, காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜே.தற்பரனால் காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலக சட்டம் மற்றும் அதன் கட்டளைகள் (மனிதப் புதைகுழிகள் மற்றும் மாவட்ட, பிரதேச செயலாளர்களின் பொறுப்புகள் உள்ளடங்கலாக) தொடர்பில் விரிவாக விளக்கமளிக்கப்பட்டது. காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலக பணிப்பாளர் சபை உறுப்பினர் ரி.யோகராஜாவால் காணாமல்போனோர் விவகாரம் தொடர்பான புள்ளிவிவரங்கள் சபையில் சமர்ப்பிக்கப்பட்டன.
அதன்பின்னர், நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜே.தற்பரனின் நெறிப்படுத்தலில் உத்தியோகத்தர்களுடனான கேள்வி – பதில் அங்கம் இடம்பெற்றது.
காணாமல்போன ஆட்கள் தொடர்பான கோவைகளின் முன்னேற்றங்களை இற்றைப்படுத்தல் மற்றும் காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் புதிய கொள்கைக் கட்டமைப்பு குறித்து அதிகாரிகளுக்கு விழிப்புணர்வூட்டுவதை நோக்கமாகக் கொண்டு இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இக்கூட்டத்தில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் சி.சத்தியசீலன், காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர், பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மன்னார் ஆகிய நான்கு மாவட்டங்களின் மாவட்டச் செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள், உதவிப் பிரதேச செயலர்கள், மாவட்டப் பிரதிப் பதிவாளர் நாயகங்கள், வடக்கு மாகாண சிறுவர் நன்னடத்தை திணைக்கள ஆணையாளர், சமூகசேவைகள் திணைக்கள உதவிப் பணிப்பாளர் உள்ளிட்ட பல உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.















