இலங்கையின் பொருளாதார மாற்றம் மற்றும் எதிர்கால முன்னேற்றத்திற்காக இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ZEE Media WION உலகளாவிய புத்தாக்கம் மற்றும் தலைமைத்துவ மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
“இந்தியாவை ஒரு போட்டியாளராகப் பார்க்காமல், இலங்கையின் முக்கிய பங்காளியாகக் கருதிச் செயல்பட வேண்டும்.
2030 மற்றும் 2035 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் 30 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான டிஜிட்டல் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப முடியும். இதற்குச் சட்டச் சீர்திருத்தங்கள் மற்றும் சைபர் பாதுகாப்பு அவசியம்.
ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவையில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் பதவியைப் பெற்றுக்கொடுக்க இலங்கை தனது ஆதரவை வழங்கும்.” – என்றார்.
இந்தியாவின் UPI கட்டமைப்பை இலங்கையின் QR முறைமையுடன் ஒருங்கிணைப்பது மற்றும் திருகோணமலையை பிராந்திய வலுசக்தி மையமாக மேம்படுத்துவது குறித்து அவர் விளக்கமளித்தார்.
இலங்கையை இந்தியாவின் உற்பத்தி ஆற்றலுக்குத் துணைசெய்யும் கேந்திர நிலையமாக மாற்ற வேண்டும் எனவும், “Made in Sri Lanka” எனும் நாமத்தை உலகளவில் கொண்டு செல்ல வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
இலங்கையின் அடுத்த கட்ட முன்னேற்றத்தில் பங்கேற்குமாறு உலக முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்த அவர், நாட்டுக்குப் பெறுமானம் சேர்க்கும் இத்தகைய கொள்கைகளுக்கு ஐக்கிய மக்கள் சக்தி தொடர்ந்தும் ஆதரவளிக்கும் என்றும் குறிப்பிட்டார்.

















