சுற்றுலா துறையை மேம்படுத்தும் நோக்கில், இலங்கை போக்குவரத்து சபையின் ஹட்டன் பேருந்து நிலையத்தால் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் வடிவமைக்கப்பட்ட சுற்றுலா பேருந்து ஒன்று எதிர்வரும் 06 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் பொதுச் சேவையில் இணைக்கப்பட உள்ளது.
இதனை ஹட்டன் பேருந்து நிலைய மேலாளர் எம். பாலித பண்டாரா தெரிவித்துள்ளார்.ரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இரத்மலானை பணிமனையிலிருந்து பெறப்பட்ட பழைய பேருந்தொன்று சுமார் 4 மில்லியன் ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டு சுற்றுலா பேருந்தாக மாற்றப்பட்டுள்ளது. இதில் 42 இருக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
பேருந்து செயல்பாட்டிற்கு முன்பாக அதில் ஸ்டுடியோ ஒலி அமைப்பு, குளிர்சாதன வசதி மற்றும் தொலைக்காட்சி உள்ளிட்ட வசதிகள் பொருத்தப்பட உள்ளன.மத்திய மாகாணத்தில் உள்ள ஹட்டன் அரச பேருந்து பணிமனையில்உருவாக்கப்பட்டுள்ள இந்தப் பேருந்து, வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளுக்காக பயன்பாட்டிற்கு விடப்பட உள்ளது.
மேலும், இந்த சேவைக்காக புதிய சீருடை அணிந்த சாரதி மற்றும் நடத்துநர் நியமிக்கப்பட உள்ளதாகவும், தேவையுடையோர் ஹட்டன் பேருந்து நிலையத்தில் பதிவு செய்து எந்த நேரத்திலும் இந்தப் பேருந்தை பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.










