நுவரெலியா ஒலிபண்ட் பகுதியில் நேற்று 24 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இரவு ஏற்பட்ட தீ வேகமாகப் பரவி நானுஓயா கிளாசோ தோட்டத்திற்கு மேல் பகுதியில் நடு காட்டுப் பகுதியில் இன்று புதன்கிழமை காலை கொழுந்து விட்டு எரிந்து வருகிறது.
இதனால் அப்பகுதி முழுவதும் கரும்புகை மூட்டமாக காட்சியளித்து வருகிறது.
இவ்வாறான சம்பவங்கள் விசமிகள் சிலரின் திட்டமிட்ட செயலாகும். காட்டுப் பகுதிகளில் வசிக்கும் விலங்குகளை வேட்டையாடுவதற்காக தீ வைப்பு சம்பவங்கள் தொடர்ந்து இடம்பெற்று வருகிறது .
தற்போது வெயிலின் தாக்கம் கடுமையாக அதிகரித்து வரும் நிலையில் மலையகத்தில் ஆங்காங்கே இதுபோன்ற விஷமிகளின் தீ வைப்புகள் அதிகரித்து வருகிறது.
இவ்வாறு விசமிகள் சிலரின் திட்டமிட்ட செயலால் காட்டு மரங்கள் எரிந்து சாம்பலாவதுடன் காட்டில் உள்ள விலங்குகள், பறவை இனங்கள் பெரும் பாதிப்பு ஏற்பட்டு சுற்றுச் சூழலுக்கும் பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
அத்துடன் மலைப்பாங்கான பகுதிகளில் இருந்து வரும் சகல நீர் ஊற்றுகளும் வறண்டு போகும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஒரு சில பகுதிகளில் தற்போது குடிநீர் தட்டுப்பாடு நிலவும் நிலையில் உள்ளது.
வனப் பகுதிகளுக்கு தீ வைப்பவர்களை அடையாளம் கண்டு உடன் அந்த பகுதியில் உள்ள வனத்துறை அதிகாரிகளுக்கு அல்லது அருகில் உள்ள காவல்துறை அதிகாரிகளுக்கு தகவல் தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.











