2025 மற்றும் 2026 ஆண்டுகளில் ஏற்பட்ட வெள்ளத்தினால் ஏற்பட்ட பகுதி மற்றும் முழுமையான சேதங்களுக்கு இதுவரை உரிய நஷ்டஈடுகள் வழங்கப்படாமல் உள்ள நிலையில், அதனை கருத்தில் கொண்டு அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுத்து அந்த நஷ்டஈடுகளை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என, மட்டக்களப்பு மாவட்ட தேசிய கமக்காரர்கள் அதிகாரசபையின் தலைவர் சந்திரசேகரம் சந்திரமோகன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற மட்டக்களப்பு மாவட்ட தேசிய கமக்காரர்கள் அமைப்புகளின் அதிகாரசபை உறுப்பினர்களின் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அவர், 2025–2026 பெரும் போக நெல் அறுவடை கடந்த 15 நாட்களாக மாவட்டத்தில் நடைபெற்று வருவதாகவும், ஏற்கனவே ஏற்பட்ட பெருவெள்ளத்தால் மாவட்டம் பெரிதும் பாதிக்கப்பட்டதுடன், தற்போது அறக்கொத்தி தாக்கம் காரணமாகவும் விவசாயிகள் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.
இவ்வாறான சூழ்நிலையில், நெல்லுக்கான நிர்ணய விலையை முந்தைய அரசாங்கத்தை விட தற்போதைய அரசாங்கம் முன்கூட்டியே அறிவித்தமைக்கு நன்றியையும் அவர் தெரிவித்தார். இருப்பினும், நிர்ணய விலை அறிவிக்கப்பட்டிருந்தாலும், மட்டக்களப்பு நெல் சந்தைப்படுத்தல் சபையை திறந்து அரசாங்கம் நேரடியாக நெல்லைக் கொள்வனவு செய்யாவிட்டால், இடைத்தரகர்கள் குறைந்த விலையில் நெல்லைக் கொள்வனவு செய்து விவசாயிகளை சுரண்டும் நிலை தொடரும் என எச்சரித்தார்.தற்போதைய நிலையில் இடைத்தரகர்கள் நெல்லை ரூ.55–60 வரையிலான விலையில் கொள்வனவு செய்து வருவதாகவும், ஏற்கனவே மாவட்டத்தில் சராசரியாக 15 மூடை மட்டுமே விளைவு கிடைத்துள்ள நிலையில், இந்த நிலை விவசாயிகளை மேலும் பாதிக்கக்கூடும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
எனவே, இடைத்தரகர்களுக்கு வாய்ப்பு வழங்காமல், உடனடியாக நெல் சந்தைப்படுத்தல் சபையை திறக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.நெல் சந்தைப்படுத்தல் சபையின் பிராந்திய முகாமையாளர் தன்னுடன் தொடர்பு கொண்டு, எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் கட்டாயமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் நெல் சந்தைப்படுத்தல் சபை திறக்கப்பட்டு நெல் கொள்வனவு ஆரம்பிக்கப்படும் என அறிவித்துள்ளதாகவும், அது நடைமுறைப்படுத்தப்படும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், 2024 மற்றும் 2025 ஆண்டுகளில் ஏற்பட்ட பெருவெள்ளம் காரணமாக சமர்ப்பிக்கப்பட்ட நஷ்டஈடு விண்ணப்பங்களுக்கு இதுவரை எந்த நிவாரணமும் வழங்கப்படவில்லை என்றும், அதனையும் அரசாங்கம் பரிசீலனை செய்து உரிய நஷ்டஈடுகளை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.அதேபோன்று, 2025 மற்றும் 2026 ஆண்டுகளில் ஏற்பட்ட வெள்ளத்தினால் ஏற்பட்ட பகுதி மற்றும் முழுமையான சேதங்களுக்கும் இன்னும் நஷ்டஈடு வழங்கப்படாத நிலையில், அவற்றையும் கருத்தில் கொண்டு உடனடியாக நஷ்டஈடுகளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
அரசாங்கம் நெல்லுக்கான நிர்ணய விலையாக ரூ.120 அறிவித்துள்ளமை நல்ல விடயமாக இருந்தாலும், உற்பத்தி செலவுகளை கருத்தில் கொண்டால் அந்த விலை போதுமானதாக இல்லை என்றும், விவசாயிகள் நியாயமான வருமானம் பெறும் வகையில் விலை நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என்றும் சந்திரமோகன் தெரிவித்தார்.











