முல்லைத்தீவு – முள்ளியவளை கமநலசேவை நிலைய பிரிவிற்குட்பட்ட மதவளசிங்கன் குளம் நீர்ப்பாசனக் குளத்தின் கீழுள்ள களமோட்டை வயல் பகுதிக்கு ஆற்றைக் கடந்து செல்வதற்கு பாலம் இன்மையால் விவசாயிகள் பெரும் இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் அப்பகுதி விவசாயிகள் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களுக்கு இதுதொடர்பில் தெரியப்படுத்தியதை அடுத்து, நாடாளுமன்ற உறுப்பினர் குறித்த பகுதிக்கு இன்றையதினம் நேரடியாகச் சென்று நிலைமைகளைப் பார்வையிட்டதுடன், குறித்த பாலத்தினை நிர்மாணிப்பது தொடர்பில் கவனம் செலுத்துவதாகத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் மேலும் தெரியவருகையில்,
முல்லைத்தீவு – முள்ளியவளை கமநலசேவை நிலைய பிரிவிலுள்ள மதவளசிங்கன் குளத்தின் கீழுள்ள களமோட்டை பகுதி வயல் நிலங்களுக்கு ஆற்றைக் கடந்து செல்வதற்கான பாலம் இன்மையால் விவசாயிகள் பாரிய இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்துள்ளனர்.
களமோட்டைப் பகுதியில் 220 ஏக்கர் வயல் நிலங்களில் பெரும்போகம் மற்றும் சிறுபோக நெற்பயிர்செய்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் குறித்த களமோட்டை வயல் பகுதிக்கு செல்லும் வழியின் குறுக்கே உள்ள ஆற்றைக் கடந்துசெல்வதற்கு பாலமொன்று இன்மையால் நெற்பயிர்செய்கைக் காலத்தில் நிலப்பண்படுத்தலுக்கு உழவியந்திரத்தை கொண்டு செல்லுதல், விவசாய உள்ளீடுகளை எடுத்துச் செல்லுதல், விவசாய நிலங்களுக்கான காவலுக்குச் செல்லுதல், அறுவடைக் காலத்தில் அறுவடை இயந்திரத்தைக் கொண்டு செல்வது, அறுவடையை எடுத்துச் செல்வது உள்ளிட்ட பல சந்தர்ப்பங்களில் விவசாயிகள் பலத்த இடர்பாடுகளுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அதேவேளை சில சந்தர்ப்பங்களில் 35அடி தூரமான ஆற்றைக் கடப்பதற்குப் பதிலாக 15 கிலோமீற்றர் சுற்றியே தமது விவசாய நிலங்களுக்கு செல்ல வேண்டிய அவலநிலையை களமோட்டைப் பகுதியில் நெற்செய்கை மேற்கொண்டுள்ள விவசாயிகள் எதிர்நோக்கியுள்ளனர்.
இந்நிலையில் விவசாயிகளின் கோரிக்கைக்கமைய நிலைமைகளை நேரில் சென்று பார்வையிட்ட வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் குறித்த ஆற்றுப் பாலத்தை அமைப்பது தொடர்பில் தம்மால் கவனம் செலுத்தப்படுமெனத் தெரிவித்திருந்தார்.
மேலும் குறித்த களவிஜத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களுடன் முள்ளியவளை கமநல சேவை நிலைய அபிவிருத்தி உத்தியோகத்தர் பேரம்பலம் தயாரூபன், மதவளசிங்கன் குளம் கமக்கார அமைப்பின் பிரதிநிதிகள், களமோட்டைப் பகுதியில் நெற்செய்கை மேற்கொள்ளும் விவசாயிகளும் இணைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.















