ஒரு நாட்டில் அமைகின்ற அரசுகளே மக்களின் வாழ்க்கை முறையை தீர்மானிக்கின்றது. அனால் அந்த அரசையும் அரசியலையும் தீர்மனிப்பது மக்களாக இருக்கின்றனர் என சுட்டிக்காட்டிய மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் (CMEV) பணிப்பாளர் விக்ரர், தமக்கான அந்த அதியுயர் சக்தியை மக்கள் சரியாக பயன்படுத்தி வெற்றி கொள்வது மிக அரிதாக உள்ளது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
தேர்தல் செலவீனங்களை முன்னிறுத்திய தேர்தல் பிரசாரங்கள் அதன் மதிப்பீடு செய்யப்பட செலவீனங்கள் தொடர்பில் கண்காணிப்பு தொடர்பிலான மாவட்ட மட்ட தேர்தலுடன் தொடர்புடையவர்களுடனான கலந்துரையடல் ஒன்று இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.
அரியாலை சர்வோதய மண்டபத்தில் நடைபெற்ற குறித்த கலந்துரையாடலில் யாழ். மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் சசீபன், யாழ் மாவட்ட பொலிஸ் அதிகாரிகள், அரசியல் கட்சிகள் சார் பிரதிநிதிகள், மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டு தத்தமது கருத்துக்களை முன்வைத்திருந்தனர்.
இதன்போது இவ்வாறு தெரிவித்திருந்த அவர் மேலும் கூறுகையில் – தேர்தலின் முக்கிய பங்குதாரரான வாக்காளர்களுக்கும், தேர்தல் திணைக்களம், பொலிசார், கண்காணிப்பு அதிகாரிகள், இடையான தகவல் பரிமாற்றம் என்பது ஒவ்வொரு தேர்தலிலும் பலவகையான தாக்கங்களை செலுத்தி வருகின்றன. இதை ஒரு முறையான பொறிமுறைக்குள் கொண்டுவருவது அவசியமாகும்.
மற்றும் தேர்தல்கால வன்முறைகளை இனங்காண்டு அதிகாரிகளுக்கு தகவல் வழங்கல், அவற்றை கட்டுப்படுத்தல், தேர்தல் செலவீனங்களை கையாளுதல் உள்ளிட்ட விடயங்களும் தற்போது பேசுபொருளாக இருக்கின்றது.
இதேநேரம் வரவுள்ள தேர்தல்களினால் சமூக ஊடகங்களின் தாக்கம் அதிகமானதாக இருக்கும் என்பது ஒரு பொதுக்கருத்தாக இருக்கின்றது. இந்த தாக்கம் தனி நபரையோ கட்சிகளையோ பாதிப்பதாக அமையுமானால் அதை எவ்வாறு எதிர்கொள்வது, அதற்கு எதிரான சட்டரீதியான நடவடிக்கைக்கு எவ்வாறு செல்வது என்பதும் பலருக்கு கடினமானதொன்றாகவே இருக்கின்றது. அதனடிப்படையில் இதற்கான விழிப்புணர்வு மிக அவசியமாகும். அதையே இந்த கலந்துரையாடல் உறுதி செய்யுமென நினைக்கின்றேன்.
சட்டதிலுள்ள சிறு இடைவெளிளை பயன்படுத்தி போலி தகவல்களை பரப்புவோர் தப்பித்துக்கொள்ளும் நிலை இருப்பதனால் அத்தகைய தவறான செய்திகளை பரப்புபவர்களை இனங்கண்டு நடவடிக்கை எடுப்பதற்கு பொலிசாரும், துறைசார் வல்லுநர்களும் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவது அவசியமாகும்.
இதேநேரம் தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையமானது கடந்த 28 வருடங்களாக இலங்கையில் தனது செயற்பாட்டை முன்னெடுத்து வருகின்றது.
எமக்கு நாட்டிலுள்ள கட்சிகள் அனைத்தும் சமனானதே. தேர்தல் போட்டியில் சமனிலை பேணப்படுவதை உறுதி செய்வதை வலியுறுத்தவே நாம் எமது கண்காணிப்பு பணிகளை முன்னெடுத்து வருகின்றோம்.
அதுமட்டுமல்லாது தேர்தலில் வாக்களிக்கும் மக்களின் வகிபாகம் அதிகரிப்பதை உறுதிசெய்யவும் அதற்கான விளிப்புணர்வுகளை ஒவ்வொரு மக்களுக்கும் சென்றடையும் வகையில் முன்னெடுத்தும் வருகின்றது என்றும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



