ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் வேந்தராக நியமிக்கப்பட்ட வணக்கத்திற்குரிய கலாநிதி கல்லேல்லே சுமனசிறி தேரர், அந்தப் பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளார்.
இவர் ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் வேந்தராக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்டு, கடந்த 14 ஆம் திகதி நியமனக் கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் இருந்து பெற்றுக்கொண்டார்.
கலாநிதி கல்லேல்லே சுமனசிறி தேரர், ஜனாதிபதியின் செயலாளருக்கு எழுதிய கடிதத்தில், அந்தப் பதவியை விட துறவி சமூகத்திற்குள் நல்லிணக்கத்திற்கு முன்னுரிமை அளிப்பதாகக் கூறியுள்ளார்.
கல்லேல்லே சுமனசிறி தேரர், ஹரங்கஹவ மொலகொட ரஜமகா விகாரையின் விகாராதிபதியாவார். அகில இலங்கை சாசனபாதுகாப்பு சபையின் கண்டி மாவட்டச் செயலாளராகவும் பணியாற்றும் அவர், ஹோமாகம பாலி மற்றும் பௌத்த பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் பதவி வகித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.