தற்போதைய அரசு தமக்கு அரசியல் ரீதியாக நெருக்கமான ஒரு சில குறிப்பிட்ட வணிகக் குழுக்களுக்குச் சாதகமாகவே தொடர்ந்து அநாவசிய முடிவுகளை எடுத்து வருகின்றது” என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
குளியாப்பிட்டிய பகுதியில் நேற்று நடைபெற்ற அக்கட்சியின் பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் தற்போதைய நிர்வாகத்தின் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது:-“
அரசு எடுக்கும் தவறான கொள்கை முடிவுகளின் பாரிய சுமையானது, கடுமையான வரி அதிகரிப்பு, வாழ்க்கைச் செலவு உயர்வு, மின்சாரம் மற்றும் எரிபொருள் விலை உயர்வு ஆகியவற்றின் மூலமும், உள்நாட்டுத் தொழில்துறைகள் மற்றும் வாழ்வாதாரங்களின் வீழ்ச்சி மூலமும் சாதாரண அப்பாவி மக்கள் மீது அநியாயமாகச் சுமத்தப்பட்டுள்ளது.
விவசாயிகள், தொழிலாளர்கள், சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முனைவோர் மற்றும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் வாழ்வாதாரப் போராட்டங்களைப் புறந்தள்ளிவிட்டு, தனது நலன்களுடன் இணைந்த ஒரு சில பிரதான வணிகர்களைப் பாதுகாப்பதையே இந்த அரசு தேர்ந்தெடுத்துள்ளது.
அரசு மக்களுடன் நிற்கவில்லை. அது ஆட்சியில் இருப்பவர்களுக்கு நெருக்கமான ஒரு சில வர்த்தகர்களுடனேயே நிற்கின்றது.
அவர்களுக்குப் பயனளிக்கும் வகையில் எடுக்கப்படும் ஒவ்வொரு முடிவும் இறுதியில் பொதுமக்கள் சுமக்கும் சுமையாக மாறுகின்றது.
நாட்டிலுள்ள உள்நாட்டுத் தொழிற்சாலைகள் பல வேகமாக மூடப்பட்டு வரும் வேளையில், அங்கு பணிபுரியும் ஊழியர்களைப் பாதுகாப்பது குறித்தோ, அவர்களின் வேலைவாய்ப்புகளைப் பாதுகாப்பது குறித்தோ அரசு ஆழமான மௌனம் காக்கின்றது.
தொழில்துறை மற்றும் முதலீட்டுக்கு நிலையானதொரு சூழலை உருவாக்குவதற்குப் பதிலாக, இந்த நிர்வாகம் தொடர்ந்து பொதுமக்கள் மீதான நிதிச் சுமையை மட்டுமே அதிகரித்து வருகின்றது.
அரசின் வலுசக்தி கொள்முதல் மற்றும் பொது விலைமுறிக் கோடல்களைக் கையாண்ட விதம் சமூகத்தில் கடுமையான விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது.
தரம் குறைந்த இறக்குமதிகள் மற்றும் முறையற்ற நிர்வாகத்தால் அரசுக்கு ஏற்படும் நட்டங்கள், இறுதியில் அதிக செலவுகள் மற்றும் வரிகள் மூலம் மக்கள் மீதே பழி சுமத்தப்படுகின்றது.
கட்டமைப்புக்குள் இருக்கும் தோல்விகளுக்கும் ஊழல்களுக்கும் மக்கள் பணம் செலுத்த வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாக்கப்படுகின்றார்கள்.
விவசாய சமூகத்துக்குப் போதிய நிவாரணமும் பாதுகாப்பும் வழங்குவதாகப் போலி வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த போதிலும், உள்ளுர் விவசாயிகளுக்கு உரிய ஆதரவளிக்க அரசு முற்றிலும் தவறிவிட்டது.
உர விலையின் கடுமையான உயர்வையும், உற்பத்திச் செலவுக்கும் விவசாயிகளுக்குக் கிடைக்கும் சந்தை வருவாய்க்கும் இடையே பாரிய இடைவெளி காணப்படுவதையும் இன்று நாம் நேரில் காண்கிறோம்.
இலங்கைக்கு இன்று அவசரமாகத் தேவைப்படுவது முதலீடுகளை ஈர்ப்பது, வேலை வாய்ப்புகளை உருவாக்குவது, உள்ளுர் உற்பத்திகளை ஆதரிப்பது மற்றும் இளைய தலைமுறையினருக்குத் தொழில்நுட்பம் சார்ந்த தொழில்துறைகளை அறிமுகப்படுத்துவது ஆகியவற்றில் கவனம் செலுத்தும் ஒரு நடைமுறைப் பொருளாதார மீட்புத் திட்டமாகும்.
அரசியல் எதிராளிகளைக் பழிவாங்கும் நோக்கில் கைது செய்வதோ அல்லது அரசுக்கு எதிரான விமர்சனங்களை அதிகார பலத்தால் முடக்க முயல்வதோ மக்கள் எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடிக்கு ஒருபோதும் தீர்வாகாது.
நாட்டுக்குத் தேவையானது உண்மையான தீர்வுகள், முதலீடுகள், வேலைவாய்ப்புகள் மற்றும் சாதாரண மக்களின் கஷ்டங்களைப் புரிந்து கொள்ளும் ஒரு முதிர்ச்சியான தலைமைத்துவம் ஆகும்.
எனவே, அரசியல் அச்சுறுத்தல்கள் மற்றும் தவறான பிரச்சாரங்களை விடுத்து, மக்கள் நலக் கொள்கைகளைக் கடைப்பிடிக்குமாறும், பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மையுடன் ஆட்சி செய்யுமாறும் அரசுக்கு நாம் அழைப்பு விடுக்கின்றோம்.” – என்றார்.










