முள்ளிவாய்க்கால் நினைவு என்பது கடந்த கால வரலாற்று நினைவு தினம் மட்டுமல்ல,அது தமிழர்களின் எதிர்கால குறித்த பொறுப்பை தமிழர்களுக்கு உணர்த்தும் நாள் என சிரேஸ்ட ஊடகவியலாளரும் ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினருமான செ.நிலாந்தன் தெரிவித்துள்ளார்.
முள்ளிவாய்க்கால் மே 18 நினைவு தினத்தை முன்னிட்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்
மே 18 முள்ளிவாய்க்கால் நினைவு தினம் என்பது தமிழ் மக்கள் வெறுமனே ஒன்று கூடி நினைவஞ்சலி செலுத்தும் நாளாக மட்டும் கருதப்பட முடியாது. அது, இலங்கையின் வடகிழக்கு தமிழர் தாயகத்தின் அரசியல் உரிமைகள், மனித உரிமைகள் மற்றும் அரசியல் அதிகாரத்தை நிலைநிறுத்துவதற்காக பல தசாப்தங்களாக முன்னெடுக்கப்பட்ட விடுதலைப் போராட்டத்தின் இறுதி நாள் மட்டுமல்ல அதுவே போராட்டத்தின் தொடர்ச்சியாகும்.
தமிழ் மக்களின் உரிமைப் போராட்டம் என்பது வடகிழக்கில் அரசியல் அதிகாரத்தை பெறுவதற்கான து மட்டுமல்ல அந்த வடகிழக்கு தமிழர் தாயகத்தில் வாழும் மக்களின் வாழ்வாதாரத்தையும் உறுதிப்படுத்துவதற்கான போராட்டமாகவே அமைந்தது. எனவே தமிழர்கள் மிகப்பெரிய வரலாற்றுப் பொறுப்பை தோலில் சுமக்க வேண்டிய நாளாக இந்த நாள் உள்ளது. முள்ளிவாய்க்கால் தமிழர் வரலாற்றில் அழியாத வலியையும், வெளிவராத உண்மைகளையும் தாங்கி நிற்கிறது.
ஆயுதப் போராட்டம் எவ்வாறு முடிவுக்கு கொண்டுவரப்பட்டது? உலக நாடுகள் மற்றும் சர்வதேச அரசியல் சக்திகள் எந்த வகையில் அந்த போரின் முடிவை வடிவமைத்தனர்? போரின் இறுதிக்கட்டத்தில் அப்பாவி பொதுமக்கள் எவ்வாறு உயிரிழந்தனர்? போராளிகள் எவ்வாறு அழிக்கப்பட்டனர்? மக்கள் எத்தகைய மனிதாபிமான பேரழிவுகளை எதிர்கொண்டனர்? போன்ற பல்வேறு கேள்விகளுடன் இன்னமும் நீதிக்கான போராட்டங்கள் தொடர்கின்றன.தமிழ் மக்களின் அழிவுக்கு இது வரை யாரும் பொறுப்பு கூற முடியாத நிலையே காணப்படுகின்றது.
தமிழினம் தனது அரசியல் உரிமைகளையும் தேசிய அங்கீகாரத்தையும் பெற்றுக்கொள்வதற்காக சுமார் 75 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு வடிவங்களில் போராடி வந்துள்ளது. அந்தப் போராட்டம் வெறும் ஆயுதப் போராட்டமாக மட்டுப்படுத்தப்படவில்லை. கல்வி, சமூக முன்னேற்றம், விவசாயம், பொருளாதாரம், கலை, கலாச்சாரம் மற்றும் நிர்வாக கட்டமைப்புகள் உள்ளிட்ட பல துறைகளில் தமிழர் சமூகத்தின் தன்னிறைவு நோக்கிய செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
ஆனால் இன்று, யுத்தம் நிறைவடைந்து 17 ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும், வடகிழக்கு தமிழர் பிரதேசங்களின் நிலை மிகவும் கவலைக்கிடமாகவே உள்ளது. போரால் பாதிக்கப்பட்ட பல கிராமங்கள் இன்னமும் முழுமையான மறுசீரமைப்பைப் பெறவில்லை.
வேலைவாய்ப்பின்மை, வறுமை, கல்வியில் பின்னடைவு, போதைப்பொருள் பரவல், இளைஞர்களின் வெளிநாட்டு இடம்பெயர்வு, விவசாயம் மற்றும் மீனவர் சமூகங்களின் வாழ்வாதார சீரழிவு, பெண்கள் தலைமையிலான குடும்பங்களின் பொருளாதார சிக்கல்கள், மனநல பாதிப்புகள், காணிப் பிரச்சினைகள் மற்றும் அரசியல் பாதுகாப்பின்மை போன்ற பல்வேறு சவால்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றன.
குறிப்பாக, போருக்குப் பின்னர் வடகிழக்கு மாகாணங்களில் மிகப்பெரிய அளவில் உட்கட்டமைப்பு, தொழில் வாய்ப்பு, கல்வி மற்றும் சமூக அபிவிருத்திகள் இடம்பெற்றிருக்க வேண்டிய நிலையில், தமிழ் மக்கள் இன்னமும் அடிப்படை தேவைகளுக்காக போராடும் சூழலில் வாழ்ந்து வருகின்றனர்.
ஒரு காலத்தில் தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு தங்களது வருமானத்தையும் உழைப்பையும் அர்ப்பணித்த மக்கள் இன்று வாழ்வாதார நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் நினைத்திருந்தால் கடந்த 17 ஆண்டுகளில் வடகிழக்கு தமிழர் தாயகப் பகுதிகள் உட்கட்டமைப்பு, கல்வி, தொழில்நுட்பம், தொழில் முயற்சி, விவசாயம் மற்றும் சமூக முன்னேற்றத்தில் மிகப்பெரிய மாற்றத்தைக் கண்டிருக்க முடியும்.
போரின் அழிவுகளில் இருந்து மக்கள் வேகமாக மீண்டு எழுந்திருக்கலாம். ஆனால், போராட்ட காலத்தில் பெருமளவில் நிதி மற்றும் ஆதரவுகளை வழங்கிய புலம்பெயர் சமூகத்திலிருந்து, யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீளக் கட்டியெழுப்புவதற்காக குறிப்பிட்ட சில உறவுகள் மட்டுமே தங்களால் இயன்ற உதவிகளை தொடர்ந்து செய்து வருகின்றனர்.
உண்மையில், அது போதுமானதாக இல்லை என்பதே வேதனையான உண்மை. எனவே, இன்று மிகவும் அவசியமானது கடந்த காலத்தை நினைத்து துயரப்படுவது மட்டுமல்ல; எதிர்காலத்தை கட்டியெழுப்பும் செயற்பாடுகளுக்கு முன்னுரிமை வழங்குவதாகும்.
வடகிழக்கு தமிழ் மக்களின் மீளெழுச்சிக்காக கீழ்க்கண்ட விடயங்களில் ஒருங்கிணைந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும்: கல்வி மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டிற்கான முதலீடுகள் , இளைஞர்களுக்கான தொழில் மற்றும் தொழில் முயற்சி வாய்ப்புகள், விவசாயம், மீன்பிடி மற்றும் சிறு தொழில்துறைகளின் மறுசீரமைப்பு, பெண்கள் தலைமையிலான குடும்பங்களுக்கான பொருளாதார ஆதரவு, போதைப்பொருள் மற்றும் சமூக சீரழிவுகளுக்கு எதிரான திட்டமிட்ட செயற்பாடுகள், மனநல மற்றும் சமூக நல சேவைகளின் விரிவாக்கம், தமிழ் மொழி, கலை, பண்பாடு மற்றும் வரலாற்று அடையாளங்களின் பாதுகாப்பு, அரசியல் உரிமைகள் மற்றும் நீதி தொடர்பான ஒருங்கிணைந்த மக்கள் செயற்பாடுகள்
உலக தமிழர்களின் திட்டமிட்ட பொருளாதார மற்றும் அறிவுசார் பங்களிப்பு என்பவற்றில் புலம்பெயர் தமிழர்கள் தங்களது பங்களிப்பை செய்ய முன்வர வேண்டும் அதற்காக இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட வேண்டும்.
முள்ளிவாய்க்கால் தமிழ் மக்களுக்கு பல வரலாற்று பாடங்களை கற்பித்து சென்றுள்ளது. கால துயரத்தை மட்டும் நினைவுகூர்வதற்கான நாளாக இருக்கக்கூடாது. அது, தமிழர் சமூகத்தின் அரசியல், பொருளாதார மற்றும் சமூக எதிர்காலத்தை மீள வடிவமைக்கும் பொறுப்பை உலகத் தமிழர்கள் ஏற்கும் நாளாக மாற வேண்டும்.
அதனை தமிழர் தேசம் சர்வதேச வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக மாற்ற வேண்டும்.முள்ளிவாய்க்கால் நினைவு தினம் என்பது உலக அரங்கில் தமிழ் மக்களின் வரலாற்று உரிமைகளை, அரசியல் அதிகாரத்தை கோரி நிற்கும் நாளாக மாற்றியமைக்கப்பட வேண்டும்.
இந்த மே 18 நினைவு நாளில், முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த அனைத்து பொதுமக்களையும் ஆழ்ந்த மரியாதையுடன் நினைவுகூருவதோடு, பாதிக்கப்பட்ட மக்களின் மீளெழுச்சி, நீதி, மனித நேயம் மற்றும் தமிழர் சமூகத்தின் எதிர்கால முன்னேற்றத்திற்காக அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய அவசியத்தையும் இந்த நாளில் வலியுறுத்தி நிற்கின்றேன் என தெரிவித்தார் .










