புதுமடம் கடற்கரையில் இருந்து படகு மூலம் இலங்கைக்கு கடத்துவதற்காக வீடு ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த இந்திய மதிப்பில் 13 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஒரு தொகுதி பொருட்கள் நேற்று (30) மீட்கப்பட்டுள்ளது.
பூச்சி மருந்து, ஷாம்பு, காபி தூள், ஃபேஸ் க்ரீம், சோப்பு4 உள்ளிட்ட பொருட்களை மீட்ட எஸ் பி தனிப்பிரிவு பொலிஸார் பொருட்களை இராமநாதபுரம் சுங்கத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
இராமநாதபுரம் மாவட்ட கடற்கரை இலங்கைக்கு மிக அருகே இருப்பதால் கடல் வழியாக படகில் கடத்தல் பொருட்கள் அதிக அளவு கடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஒரு மாத காலமாக தேர்தல் நடத்தை விதிகள் அமுலில் இருந்தமையினால் ஆங்காங்கே தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்ததால் கடத்தல் சம்பவங்கள் குறைந்து இருந்த நிலையில் தேர்தல் நடத்தை விதிகள் தளர்க்கட்டதால் மீண்டும் கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து உள்ளது.
இந்நிலையில் உச்சப்புளி அடுத்த புதுமடம் கடற்கரையில் இருந்து படகில் கடல் வழியாக இலங்கைக்கு கடத்துவதற்காக மானாங்குடி சாலையில் உள்ள வீடு ஒன்றில் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக இராமேஸ்வரம் உட்கோட்ட எஸ் பி தனிப்பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் ஆளில்லாத அந்த வீட்டை சுற்றி வளைத்த தனிப்பிரிவு பொலிஸார் வீட்டிற்குள் சென்று சோதனை செய்தபோது அங்கு 28 மூட்டைகளில் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து அந்த மூட்டைகளை திறந்து பார்த்த போது 19 மூட்டைகளில் பூச்சி கொல்லி மருந்து, இரண்டு மூட்டைகளில் சோப்பு, ஐந்து மூட்டைகளில் ஃபேஸ் க்ரீம், ஒரு மூட்டையில் ஷாம்பு, ஒரு மூட்டையில் காபித்தூள் என மொத்தமாக 13 இலட்சம் மதிப்பிலான பொருட்கள் இருந்தது தெரியவந்ததையடுத்து பொருட்களை பறிமுதல் செய்த தனி பிரிவு பொலிஸார் மேலதிக விசாரணைக்காக அதை கீழக்கரை சுங்கதுறை கண்காணிப்பாளர் வெங்கடேஷிடம் ஒப்படைத்த பின் இராமநாதபுரம் சுங்கத்துறை அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டது.
மேலும், கடத்தல் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வீட்டின் உரிமையாளர் தலைமறைவாக உள்ள நிலையில் அவரை பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இலங்கைக்கு கடத்துவதற்காக வீட்டில் ரூ.13 இலட்சம் மதிப்பிலான கடத்தல் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் புதுமடம் அருகே உள்ள கடற்கரை கிராமங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












