இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து மேற்கொண்ட தாக்குதலில் உயிரிழந்த ஈரானின் உயர்த் தலைவர் கொமெய்னியின் உடல், ஈரானின் புனித நகரமான மஷாத்தில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.இதனிடையே, ஈரானின் புதிய உயர்த் தலைவராக அவரது 56 வயதான மூத்த மகன் மொஜ்தபா கொமெய்னி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
கொமெய்னியின் உடலை, அவரது தந்தை நல்லடக்கம் செய்யப்பட்ட நினைவிடத்திற்கு அருகில் அடக்கம் செய்ய குடும்பத்தினர் தீர்மானித்துள்ளதாகவும், இறுதிச் சடங்குகளுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவரது உடல், பிறந்த ஊரான மஷாத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஷியா புனிதத் தலமான இமாம் ரெசா நினைவிடத்தில், தந்தையின் கல்லறைக்கு அருகில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
மஷாத்திற்கு கொண்டு செல்லப்படுவதற்குமுன், ஈரான் தலைநகர் தெஹ்ரானில் அமைந்துள்ள கிராண்ட் இமாம் கொமெய்னி தொழுகைக் கூடத்தில் பெருமளவிலான பொதுமக்கள் பங்கேற்கும் விடைபெறும் நிகழ்வொன்றையும் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பாதுகாப்பு காரணங்களால் இறுதிச் சடங்குகள் நடைபெறும் திகதி மற்றும் நேரம் தொடர்பான விவரங்கள் அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை. அவை பாதுகாப்பு காரணங்களுக்காக இரகசியமாக வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையில், தலைநகர் தெஹ்ரானின் பல பகுதிகளில் ஏற்கனவே பெருமளவிலான மக்கள் ஒன்று கூடி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து தெஹ்ரானில் மேற்கொண்ட தாக்குதலில் கொமெய்னி உயிரிழந்தார்.அவரது மறைவையொட்டி ஈரானில் 40 நாட்கள் தேசிய துக்கமும், 7 நாட்கள் பொது விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது.










