மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்றாம் நிலை கல்வி மற்றும் தொழிற்கல்வி ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களுடன் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது. இக்கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் ஜே. எஸ். அருள்ராஜ் அவர்களின் தலைமையில், மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் எஸ். ராஜ்பாபு அவர்களின் ஏற்பாட்டில், பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (03) இடம்பெற்றது.
மூன்றாம் நிலை கல்வி மற்றும் தொழிற்கல்வி ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட அரச மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களில், சமுர்த்தி மற்றும் அஸ்வசும திட்டங்களின் பயனாளர்களின் பிள்ளைகளுக்காக என்.வி.க்யூ மூன்றாம் மற்றும் நான்காம் நிலை சான்றிதழ் கற்கை நெறிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இவ்வருடம் (2025) என்.வி.க்யூ மூன்றாம் மற்றும் நான்காம் நிலை கனரக வாகன இயக்குநர் பயிற்சி நெறியை வெற்றிகரமாக முடித்த சமுர்த்தி மற்றும் அஸ்வசும பயனாளர்களின் பிள்ளைகளுக்கு சான்றிதழ்கள்இந்நிகழ்வில் அரசாங்க அதிபர் அவர்களால் வழங்கப்பட்டன.
மேலும், எதிர்வரும் காலத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய கற்கை நெறிகள் தொடர்பாகவும் இக்கலந்துரையாடலில் விரிவாக பேசப்பட்டது.
இந்தப் பயிற்சி நெறிகள் துறையில் நிபுணத்துவம் பெற்ற பயிற்றுநர்களால் வழங்கப்படுவதால், பயிற்சியை முடிக்கும் நபர்களுக்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தொழில் வாய்ப்புகள் கிடைக்கும் நிலை உருவாகும். இதன் மூலம் அவர்களின் வாழ்வாதாரமும் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிகழ்வில் மாவட்ட சிரேஷ்ட சமுர்த்தி கருத்திட்ட முகாமையாளர் ஏ. எம். அலி அக்பர், தொழிற்கல்வி மற்றும் பயிற்சி அதிகார சபை, தேசிய தொழிற்பயிற்சி அதிகார சபை உள்ளிட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகள், தனியார் கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.











