தம்புள்ளை, யாபாகம பகுதியைச் சேர்ந்த இளம் தம்பதியினர் இரு சக்கர வாகன விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. திருமணமாகி மூன்று மாதங்களே ஆன நிலையில் நிகழ்ந்த இந்தச் சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
யாபாகம பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞரும், அவரது 22 வயதுடைய மனைவியுமே உயிரிழந்துள்ளனர். திருமணத்திற்குப் பின்னர் கம்பஹா பகுதியில் உள்ள ஒரு உணவு விநியோக நிறுவனத்தில் பணியாற்றி வந்த இவர்கள், அங்கு வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர்.
விடுமுறைக்காக தம்புள்ளையில் உள்ள பெற்றோரின் இல்லத்திற்கு வந்திருந்த தம்பதியினர், மீண்டும் பணிக்குத் திரும்பும் நோக்கில் இரு சக்கர வாகனத்தில் கம்பஹா நோக்கிப் பயணித்தனர். இதன்போது, கண்டி–கொழும்பு பிரதான வீதியின் வதுபிடிவல பகுதியில் அவர்களின் இரு சக்கர வாகனம் பேருந்து ஒன்றுடன் மோதியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்களின் இறுதிக் கிரியைகள் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் யாபாகம பொது மயானத்தில் நடைபெற்றன. இதில் பெருந்திரளான உறவினர்களும் கிராம மக்களும் கலந்து கொண்டு கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்தினர்.இரு சக்கர வாகனப் பயணங்களில் இளைஞர்கள் மிகுந்த கவனத்துடன் செயற்பட வேண்டும் என கிராம மக்கள் கவலையுடன் தெரிவித்தனர்.










