ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 12 பேரின் உறவினர்கள் இன்று காலை ஜனாதிபதி செயலகம் முன் கவனவீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
தங்கள் குடும்பங்களுக்கு இழைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் “பாரிய அநீதிகள்” குறித்து ஜனாதிபதி தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி, மனுவையும் கையளித்தனர்.போராட்டக்காரர்களில் ஒரு குழுவினர் பின்னர் ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவருடன் கலந்துரையாட அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்ய உள்ளதாகவும், அதேவேளை ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கி வழக்கை மீளாய்வு செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தண்டனை பெற்றவர்களில் ஒருவரின் மனைவி ஊடகங்களிடம் பேசுகையில், தனது கணவர் குடும்பத்தின் ஒரே வருமான ஈட்டுபவர் என்றும், ஐந்து குழந்தைகள் மற்றும் வயதான உறவினர்களை அவர் கவனித்து வந்ததாகவும் தெரிவித்தார். அவரது கைது காரணமாக வாடகை வீட்டில் கடுமையான பொருளாதார சிரமங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருவதாகவும் அவர் கண்ணீருடன் கூறினார்.
மேலும், தண்டனை பெற்றவர்களில் ஒருவர் தாம் எந்தத் தவறும் செய்யவில்லை என தொடர்ந்து கூறி வந்ததாக உறவினர் ஒருவர் தெரிவித்தார்.
கடந்த வாரம் இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிமன்றம், சம்பவத்துடன் தொடர்புடைய 12 பேருக்கு மரண தண்டனை விதித்திருந்தது. இந்த தீர்ப்பு நாட்டில் பெரும் கவனத்தை பெற்ற நிலையில், தற்போது அவர்களின் குடும்பத்தினர் மனிதாபிமான அடிப்படையில் நீதி வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.










