வவுனியா மாவட்டத்தில் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட வீடுகளில் சுமார் 600 வீடுகள் தற்போது பயன்படுத்தப்படாமல் பூட்டப்பட்ட நிலையில் உள்ளதாக மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் பிரதி அமைச்சருமான உபாலி சமரசிங்க தெரிவித்துள்ளார்.
வவுனியா பிரதேச செயலகத்தில் இன்று நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இதனை அவர் குறிப்பிட்டார்.
தேசிய வீடமைப்பு அதிகார சபையால் வவுனியா மாவட்டத்தில் 3349 வீடுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், மன்னார் மாவட்டத்தில் 2554 வீடுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.வவுனியாவில் மேலும் பல வீடுகள் இறுதி கட்ட பணிகளில் உள்ளதாகவும், அவை பூர்த்தி செய்யப்பட்டால் 900 வீடுகள் முழுமையாக பயன்பாட்டுக்கு வரும் என பாராளுமன்ற உறுப்பினர் ப. சத்தியலிங்கம் தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த உபாலி சமரசிங்க, கடந்த காலத்தில் சில குடும்பங்களுக்கு இரண்டு அல்லது மூன்று வீடுகள் வழங்கப்பட்டு, அவை பயன்படுத்தப்படாமல் மூடப்பட்டுள்ளதாகவும் கூறினார். மடுகந்த, குடாகச்சகொடி, ஈரப்பெரியகுளம், கலாபோகஸ்வேவ உள்ளிட்ட பகுதிகளில் இவ்வாறான வீடுகள் காணப்படுகின்றன எனவும் தெரிவித்தார்.
மேலும், முன்னாள் அமைச்சர் சஜித் பிரேமதாச வழங்கிய வீடுகளில் உண்மையில் வீடு இல்லாதவர்களின் வீடுகளை பூர்த்தி செய்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பயன்படுத்தப்படாமல் உள்ள வீடுகளை மீளப் பெற்று வீடு இல்லாத மக்களுக்கு வழங்கும் திட்டம் பரிசீலனையில் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.பாதிக்கப்பட்ட மற்றும் வீடு இல்லாத மக்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனவும் அவர் உறுதியளித்தார்.










