கியூபாவில் நிலவி வரும் கடுமையான எரிபொருள் பற்றாக்குறை மற்றும் விமான சேவைகளில் ஏற்பட்டுள்ள சிக்கல்களை முன்னிட்டு, அந்நாட்டிற்கு செல்லும் பயணிகள் குறித்து கனடா அரசு அவசர எச்சரிக்கை அறிவித்துள்ளது.கனடாவின் வெளிவிவகார அமைச்சர் அனிதா ஆனந்த் வெளியிட்ட அறிவிப்பில், கியூபாவிற்கு அவசியமற்ற அனைத்து பயணங்களையும் தவிர்க்குமாறு கனடியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தற்போது கியூபாவில் தங்கியிருக்கும் கனடியர்கள், வர்த்தக விமான சேவைகள் இயங்கிக் கொண்டிருக்கும் வரை தாமதமின்றி தாயகம் திரும்புமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.கியூபாவின் பல விமான நிலையங்களில் விமான எரிபொருள் விநியோகம் நிலைத்தன்மையற்ற நிலையில் உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் காரணமாக பல விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து, முக்கிய கனடிய விமான நிறுவனங்கள் கியூபாவிற்கான தங்களது வர்த்தக விமான சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளன.கியூபாவில் உள்ள கனடியர்களை பெப்ரவரி 17ஆம் திகதிக்குள் பாதுகாப்பாக நாட்டிற்கு மீள அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சம்பந்தப்பட்ட தரப்புகள் தெரிவித்துள்ளன.மேலும், திட்டமிடப்பட்ட சில விமானங்கள் மாற்றப்பட்டோ அல்லது ரத்து செய்யப்பட்டோ டொராண்டோ வழியாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கனடியர்களை பாதுகாப்பாக மீள அழைத்துவர அரசு மற்றும் விமான நிறுவனங்கள் இணைந்து செயல்பட்டு வருவதாக வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.அந்நாட்டில் தங்கியிருக்கும் அனைவரும் சாத்தியமான வர்த்தக விமான சேவைகள் கிடைக்கும் வரை உடனடியாக நாடு திரும்புமாறு மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது.










