கொழும்பிலிருந்து முல்லைத்தீவிற்கான குளிரூட்டப்பட்ட சொகுசு பேருந்து சேவை இன்று (12) காலை 08.30 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் முல்லைத்தீவு – கொழும்பிற்கான சொகுசு பேருந்து சேவை விவகாரத்தில் தமது தொடர் முயற்சிக்கு கிடைத்த வெற்றியாகவே தாம் இதனை பார்ப்பதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு – கொழும்பிற்கான சொகுசு பேருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டமை தொடர்பாக இன்று ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,’முல்லைத்தீவிலிருந்து கொழும்பிற்கான குளிரூட்டப்பட்ட சொகுசு பேருந்து சேவை ஒன்று இன்மையால் முல்லைத்தீவில் மக்கள் பலரும் பல்வேறு இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்து வந்தனர்.
குறிப்பாக முல்லைத்தீவு மக்களுடன், வெளிமாவட்டங்களிலிருந்து முல்லைத்தீவு மாவட்டத்திற்கு சேவையாற்ற வருகின்ற வைத்தியர்கள் மற்றும் திணைக்கள உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பல தரப்பினர் பலத்த இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்து வந்தனர்.
அத்தோடு இவ்வாறான போக்குவரத்தே இடர்பாடுகள் இருந்தமையால் வெளிமாவட்டங்களை சேர்ந்த வைத்தியர்கள், திணைக்கள உயர் அதிகாரிகள் முல்லைத்தீவிற்கு வருகைதந்து பணியாற்றுவதில் அதிக நாட்டம் கொள்ளாத நிலையும் காணப்பட்டது.
இந்நிலையில் முல்லைத்தீவு – கொழும்பிற்கான குளிரூட்டப்பட்ட சொகுசு பேருந்து சேவை ஒன்றினை ஆரம்பிப்பது தொடர்பில் என்னிடம் பல தரப்பினரும் முறையீடுகளை செய்திருந்தனர்.
அதற்கமைய கடந்த 29.05.2025 அன்று முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற, முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் முல்லைத்தீவு – கொழும்பிற்கான சொகுசு பேருந்து சேவை ஒன்றினை ஆரம்பிக்க வேண்டுமென என்னால் தீர்மானம் ஒன்று முன்மொழியப்பட்டது. குறித்த தீர்மானம் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டு குறித்த தீர்மானத்தினை உரிய அமைச்சிற்கும் அனுப்பி வைப்பதெனவும் முடிவெடுக்கப்பட்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து கடந்த 22.07.2025 நாடாளுமன்றக் கட்டடத்தொகுதியில் இடம்பெற்ற போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சின் அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்திலும் இந்த முல்லைத்தீவு – கொழும்பிற்கான குளிரூட்டப்பட்ட பேருந்து சேவை ஆரம்பிக்கப்படவேண்டுமென அமைச்சர் விமல் ரத்நாயக்கவிடம் வலியுறுத்தியிருந்தேன்.
அவ்வாறு என்னால் வலியுறுத்தப்பட்டதையடுத்து குறித்த பேருந்து சைவையை ஆரம்பிப்பது தொடர்பில் ஆய்வுகளை மேற்கொண்டு ஆய்வறிக்கைகளை தம்மிடம் சமர்ப்பிக்குமாறு அமைச்சர் விமல் ரத்நாயக்க அமைச்சின் அதிகாரிகளிடம் தெரிவித்ததுடன், ஆய்வறிக்கைகள் கிடைத்தவுடன் அதனை பார்த்து குறித்த பேருந்து சேவையை ஆரம்பிப்பது தொடர்பில் பரிசீலிக்கப்படுமெனவும் என்னிடம் தெரிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து கடந்த 09.10.2025 அன்று இடம்பெற்ற அமைச்சுசார் ஆலோசனைக் கூட்டத்தில் இந்த குளிரூட்டப்பட்ட சொகுசு பேருந்து சேவையை ஆரம்பிப்பது தொடர்பில் மீண்டும் கேள்வி எழுப்பியிருந்தேன்.
இத்தகைய சூழலில் கடந்த 15.10.2025 ஆம் திகதியன்று அமைச்சு மட்ட அதிகாரிகளுடன் விசேட கூட்டமொன்று இருப்பதாகவும், அக்கூட்டத்தில் இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டு, ஒக்டோபர் மாத இறுதிப் பகுதிக்குள் முல்லைத்தீவிற்கான குளிரூட்டப்பட்ட சொகுசு பேருந்து சேவையினை ஆரம்பிக்கப்படுமென அமைச்சர் விமல் ரத்நாயக்கவினால் எனக்கு பதில் தரப்பட்டிருந்தது.
இவ்வாறாக ஒக்டோபர் மாத இறுதிப் பகுதிக்குள் ஆரம்பிக்கப்படுவதாக கூறப்பட்ட குறித்த சொகுசு பேருந்து சேவை குறித்த காலப்பகுதிக்குள் ஆரம்பிக்கப்படாத நிலையில், நாடாளுமன்றில் கடந்த 11.11.2025 அன்று இடம்பெற்ற 2026 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட இரண்டாம் மதிப்பீட்டு விவாதத்தில் பங்கேற்று கருத்துத் தெரிவிக்கும்போதும் சொகுசு பேருந்து சேவை முல்லைத்தீவில் ஆரம்பிக்கப்படாத விடயத்தினையும் சுட்டிக்காட்டிப் பேசியிருந்தேன்.
இவ்வாறாக குறித்த பேருந்து சேவையை ஆரம்பிப்பதற்கு தொடர்சியாக எம்மால் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்ததன் பயனாக 12.11.2025 இன்று கொழும்பிலிருந்து காலை 08.30 மணிக்கு முல்லைத்தீவிற்கான குளிரூட்ட பேருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை 12.11.2025 இன்று இரவு 09.30 மணிக்கு முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பிலிருந்து கொழும்பிற்கான குளிரூட்டப்பட்ட சொகுசு பேருந்து சேவையும் ஆரம்பிக்கப்படவுள்ளதான மகிழ்ச்சியான செய்தியும் எமக்கு கிடைத்திருக்கின்றது. இந்த போக்குவரத்துச் சேவை இனி தொடர்ச்சியாக இடம்பெறும்.
எனவே எமது தொடர்ச்சியான கோரிக்கைகளுக்கு செவிசாய்த்து, முல்லைத்தீவிற்கான சொகுசு பேருந்து சேவையை ஆரம்பித்த அமைச்சர் விமல் ரத்நாயக்கவிற்கு எமது முல்லைத்தீவு மாவட்ட மக்கள் சார்பாக எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்’ என்றார்.










