வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்படும் 100 நாட்கள் செயல்முனைவின் ஐம்பதாவது நாள் செயற்திட்டமானது இன்றைய தினம் (20) மட்டக்களப்பு சந்திவெளி, பாலையடிதோணா பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்டது.
“சமூகப் பிரச்சினைகளும் – சமஸ்டி முறையிலான தீர்வுகளும்” என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள எட்டு மாவட்டங்களிலும் நிரந்தரத் தீர்வுகளுக்கான அரசியல் உரையாடலை உருவாக்கும் நோக்கில் இந்த 100 நாள் செயல்முனைவு நான்காவது வருடமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
தமிழ் மக்களின் இனப்பிரச்சினை தொடர்பிலான விடயங்கள், சமஸ்டி தீர்வு தொடர்பான விழிப்புனர்வுகள் கிராம மட்ட மக்களுக்கும் உணர்த்தப்பட வேண்டும் என்ற நோக்கில் இன்றைய தினம் பாலையடித்தோணா கிராம மக்களுடனான கலந்துரையாடல் நிகழ்வாக இச்செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது.
இதன்போது, வடக்கு, கிழக்கில் நிலவுகின்ற நிலம் சார்ந்த, மொழி, மதம் சார்ந்த பிரச்சினைகளுக்கு உரியதான தீர்வு சமஸ்டி முறையிலேயே கிடைக்கப்படும் என்ற அடிப்படை நோக்கம் கருதியதான கருத்துக்கள் மக்கள் மத்தியில் தெளிவுபடுத்தப்பட்டது. இதன்போது மக்களிடமிருந்தும் கருத்துப் பகிர்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
தற்போது நடைபெறுகின்ற ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரின் முக்கியத்துவம், அடுத்த தலைமுறையினருக்கு தமிழ் மக்களின் பிரச்சனைகள், தமது உரிமைகள் பறிபோகின்ற விடயங்களை அறியாமல் இருக்கும் இளைஞர் சமுதாயத்திற்கு இதனைக் கொண்டு செல்வது தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
இக்குறித்த கலந்துரையாடலில் வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு ஏற்பாட்டாளர்கள் மற்றும் பாலையடித்தோணா கிராம மாதர் சங்கத்தினர், கிராம அபிவிருத்திச் சங்கத்தினர் உள்ளிட்ட பொது மக்கள் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.












