மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துவதற்கு அரசு எடுக்கும் சகல தீர்மானங்களுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு முழுமையாக ஒத்துழைப்பு வழங்கும் என்று அதன் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்தார்.
அத்துடன், தற்போது அமுலில் உள்ள தேர்தல் முறைமையில் காணப்படும் சட்ட மற்றும் தொழில்நுட்ப சிக்கல்களுக்குத் தீர்வு காண்பதற்காக, நாடாளுமன்ற விசேட செயற்குழுவுக்கு மூன்று அவதானிப்புகளைத் தேர்தல்கள் ஆணைக்குழு முன்வைத்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
பெண் மற்றும் இளைஞர் பிரதிநிதித்துவத்துக்கான 25 சதவீத கட்டாய ஒதுக்கீட்டு முறைமை, தேவையான சட்டரீதியான திருத்த நடவடிக்கைகள் மற்றும் தற்போதைய நிர்வாகத் தயார்படுத்தல்களின் நிலைமை உள்ளிட்ட விடயங்களை உள்ளடக்கி, தேர்தல்கள் ஆணைக்குழு நாடாளுமன்ற விசேட செயற்குழுவுக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளது. இது குறித்து ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
“பழைய தேர்தல் முறைமையின் கீழ் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதாயின், பெண் பிரதிநிதித்துவம் மற்றும் இளைஞர் பிரதிநிதித்துவத்தின் போது வேட்புமனுக்களுக்கான ஒதுக்கீடு மற்றும் கட்டாய ஆசன ஒதுக்கீடு என்ற அடிப்படையில் பல யோசனைகளை விசேட செயற்குழுவுக்கு முன்வைத்துள்ளோம். அவற்றைச் செயற்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதேநேரம், மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று அரசியல் தரப்பினர் குறிப்பிடும் கருத்துக்களை நாங்கள் முழுமையாக நிராகரிக்கின்றோம். மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் மாகாண சபைகள் இயங்குவது ஜனநாயகத்துக்கு முரணானது என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம். பொருளாதார பாதிப்புக்கு பின்னர் நாட்டில் மூன்று முக்கிய தேர்தல்களை வெற்றிகரமாக நடத்தியுள்ளோம். அந்தத் தேர்தல்களை நடத்துவதில் எவ்வித சட்டச் சிக்கலும் காணப்படவில்லை.
ஆனால், மாகாண சபைத் தேர்தல் விடயத்தில் 2017 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட புதிய சட்டத்தைத் தொடர்ந்து, எந்தத் தேர்தல் முறைமையின் கீழ் இந்தத் தேர்தலை நடத்தலாம் என்ற சட்டச் சிக்கல் நீடித்து வருகின்றது. இதற்கு நாடாளுமன்றத்தின் ஊடாகவே தீர்வு காணப்பட வேண்டும் என்று உயர்நீதிமன்றம் பலமுறை விசேட தீர்மானங்களை வழங்கியுள்ளது.
எனவே, ஆணைக்குழுவால் முன்வைக்கப்பட்டுள்ள மூன்று யோசனைகளையும் செயற்படுத்த அரசு விசேட கவனம் செலுத்த வேண்டும். நாடாளுமன்றத்தின் ஊடாக அதற்குரிய சட்டப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நாங்கள் எப்போதும் உறுதியாக இருக்கின்றோம்.” – என்றார்.










