ஐக்கிய தேசியக் கட்சியின் 79 ஆவது ஆண்டு விழா இன்று (20) நடைபெறவுள்ளது.
கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் பத்தரமுல்லையில் உள்ள மோனார்க் இம்பீரியல் ஹோட்டலில் இன்று காலை 9 மணிக்கு இந்த விழா ஆரம்பமாகவுள்ளது.
“ஒன்றாக நிற்போம், ஜனநாயகத்தை பாதுகாப்போம், அனைத்து சக்திகளையும் ஒன்றிணைப்போம்” என்ற கருப்பொருளில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆண்டு விழா இம்முறை இடம்பெறவுள்ளது.
இந்த விழாவில் பங்கேற்பதற்கு எதிரணியில் உள்ள அனைத்து கட்சிகளின் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
எனினும், இந்த விழாவில் எதிர்க்கட்சித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ பங்கேற்கமாட்டார் என்று அறியமுடிகின்றது.
ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே கட்சி சார்பில் கலந்து கொள்வார்கள் எனத் தெரியவருகின்றது.
கட்சியின் வாழ்த்துச் செய்தியை வழங்குவதற்காகவே ரஞ்சித் மத்தும பண்டார இந்த விழாவில் பங்கேற்கச் செல்கின்றார்.










