இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் தன்னைக் கைது செய்வதைத் தடுக்குமாறு கோரி முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று (14) முன் பிணை மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
கிரிந்த மீன்பிடித் துறைமுகத்தில் மணல் அகழ்வுத் திட்டத்தை கொரிய நிறுவனத்துக்கு ஒப்படைத்து அரசாங்கத்திற்கு 2.63 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமாக நட்டத்தை ஏற்படுத்தினார் எனக் கூறப்படும் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனுவெல கடந்த வெள்ளிக்கிழமை உத்தரவிட்டிருந்தார்.
இதனையடுத்துத் தன்னைக் கைது செய்வதைத் தடுக்குமாறு கோரி முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் முன் பிணை மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவினால் தாக்கல் செய்யப்பட்ட முன் பிணை மனுவைப் பரிசீலித்த கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி, இந்த வழக்குத் தொடர்பான சான்றுகளை எதிர்வரும் 18 ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளார்.










