ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ அல்ஹாஜ் ரவூப் ஹக்கீம் இன்று (07) கரையோரப் பாதுகாப்பு திணைக்கள பணிப்பாளர் நாயகம் திரு. டேனி பிரதீப் குமாரை திணைக்களத்தில் நேரில் சந்தித்து கலந்துரையாடினார்.
இந்தச் சந்திப்பின் போது, கல்முனை கடற்கரைப் பகுதியில் தொடர்ச்சியாக ஏற்பட்டு வரும் கடலரிப்பு அபாயத்தைப் பற்றி தீவிரமாக சுட்டிக்காட்டியதுடன், அதனால் ஏற்பட்டுள்ள சேதங்கள் மற்றும் எதிர்பார்க்கப்படும் இடர்பாடுகள் குறித்து விரிவாக விளக்கமளித்தார்.
கடலரிப்பால் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாஹுர் ஆண்டகை தர்ஹா ஷரீஃப்பையும், அதன் அருகிலுள்ள வீதியையும் கடல் உலுக்கியுள்ளதோடு, மீனவர் சமூகத்தின் வாழ்வாதாரம் பலவீனமடைந்துள்ளதையும் அவர் எடுத்துரைத்தார்.
மேலும், மஸ்ஜிதுல் பலாஹ் பள்ளிவாசலின் கடற்கரைப் பகுதி மற்றும் ஹுதா பள்ளிவாசல் திடல் பகுதிகளும் கடலரிப்பால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதையும் அவர் வலியுறுத்தினார்.
இந்நிலையில், இந்த அபாயமான சூழ்நிலையை ஆழமாக கவனித்து, அவசர பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு, சம்பந்தப்பட்ட பொறுப்பாளர்களை உடனடியாக ஒருங்கிணைத்து செயலில் ஈடுபடுத்துமாறு பணிப்பாளர் நாயகத்திடம் ரவூப் ஹக்கீம் அவர்கள் கடுமையாகக் கேட்டுக் கொண்டார்.
இந்தச் சந்திப்பில் பல உயர் அதிகாரிகள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.












