மகாவலி குடியேற்றத் திட்டத்தின் மூலம் வவுனியா வடக்கில் புதிதாக தமிழ் மக்களின் பூர்வீக நிலங்கள் 600 ஏக்கர் பறிபோகும் அபாய நிலை ஏற்பட்டுள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் இன்று தெரிவித்துள்ளனர்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் எஸ்.தவபாலன், கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களான வவுனியா வடக்கு பிரதேச சபை உப தவிசாளர் சஞ்சுதன், வவுனியா மாநகர சபை உறுப்பினர் தர்மா, வவுனியா வடக்கு பிரதேச சபை உறுப்பினர் தமிழ்ச்செல்வன் மற்றும் பிரதீபன் உள்ளடங்கிய கட்சி உறுப்பினர்கள், மற்றும் காணி உரிமையாளர்கள் ஆகியோர் குறித்த நிலங்களை சென்று பார்வையிட்ட பின்னரே இவ்வாறு தெரிவித்தனர்.
வவுனியா வடக்கில் தமிழ் மக்களின் எல்லைக் கிராமங்களில் ஒன்றான வெடிவைத்தகல், திரிவைச்சகுளம் மற்றும் அதற்கு கீழான 600 ஏக்கருக்கும் மேலான வயல்க் காணிகள் சிங்கள மக்களினால் தற்போது ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. எந்த ஒரு வகையான காணி ஆவணங்களும் இல்லாமல் குறித்த காணிகள் எல்லையோர சிங்கள மக்களினால் சத்தமில்லாமல் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கின்றது. குறித்த ஆக்கிரமிப்பு மிக வேகமாக வெடிவைத்தகல்லு சந்தி வரை நகர்ந்து வந்து கொண்டிருக்கின்றது.
குறித்த காணிகளை மகாவலி திட்டத்தின் கீழ் உள்வாங்கும் நோக்கோடு வனவளத் திணைக்களம் மற்றும் இராணுவத்தினரின் ஆதரவுடன் காடுகள் அழிக்கப்பட்டு குறித்த நிலப்பகுதி ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றது.
குறித்த நிலமானது தமிழ் மக்கள் யுத்தத்திற்கு முன்னர் விவசாயம் செய்த நிலங்களாகும். அவ் நிலங்களின் உரிமையாளர்கள் கடந்த 2020 ஆம் ஆண்டு குறித்த காணிகளை துப்பரவு செய்த போது வனவளத் திணைக்களம் அவர்களை கைது செய்து நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்தது. அதன்பின் நீதிமன்றத்தால் 2022 ஆம் ஆண்டு குறித்த காணி உரிமையாளர்கள் நிரபராதிகள் என வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட பின்னரும் காணிகளை துப்பரவு செய்ய பாதுகாப்பு தரப்பினரும், வனவளத் திணைக்களமும் அனுமதி வழங்காது தடையை ஏற்படுத்தி வந்திருந்தனர்.
தற்போது குறித்த இடங்கள் உள்ளடங்களாக 600 ஏக்கருக்கு மேற்பட்ட நிலங்கள் காடுகள் அழிக்கப்பட்டு பெரும்பான்மை சிங்கள மக்களால் கையகப்படுத்தப்பட்டு வருகின்றது. கொக்கச்சான்குளம் ஆக்கிரமிக்கப்பட்டு கலாபோகஸ்வேவ ஆக மாறியது போன்று தற்போது திரிவைத்தகுளம் ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றது. ஆட்சி மாறிய போதும் தென்னிலங்கை அரசாங்கத்தின் மனநிலையில் மாற்றம் வரவில்லை. எனவே இதனை உடனடியாக தடுத்து நிறுத்த அனைத்து தமிழ் மக்களும் ஓரணியில் அணி திரண்டு எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் தெரிவித்துள்ளனர்.


















