10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை எட்டி விட்டது. மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெற்ற போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்சை எதிர்கொண்டது. இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 73 ரன்கள் எடுத்தார்.
இதையடுத்து, 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங் செய்த டெல்லி கேபிடல்ஸ் அணி துவக்கமே தடுமாறியது. 18.2 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த டெல்லி அணி 121 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் மும்பை அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் மும்பை அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது.
இந்த நிலையில் இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய சூர்யகுமார் யாதவ், தென் ஆப்பிரிக்கா வீரர் பவுமாவின் சாதனையை சமன் செய்துள்ளார்.
சூர்யகுமார் யாதவ், இந்த சீசனில் களம் இறங்கிய 13 ஆட்டங்களிலும் குறைந்தது 25 ரன்கள் எடுத்துள்ளார். இதன் மூலம் 20 ஓவர் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக அதிக முறை 25 ரன்களுக்கு மேல் எடுத்த தென்ஆப்பிரிக்க வீரர் பவுமாவின் சாதனையை (இவரும் 13 முறை) சமன் செய்தார். நடப்பு தொடரில் இதுவரை 13 ஆட்டங்களில் ஆடியுள்ள சூர்யகுமார் யாதவ் 4 அரைசதம் உள்பட 583 ரன்கள் குவித்துள்ளார்.