யாழ்ப்பாணத்தில் தென்னிலங்கை சுற்றுலா பயணிகளின் பேரூந்து மீது இன்றைய தினம் திங்கட்கிழமை இரவு மோட்டார் சைக்கிளில் வந்த மூவர் தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளனர்.
வேலணை பகுதியில் இருந்து யாழ்ப்பாண நகர் நோக்கி வந்த பேரூந்து, மோட்டார் சைக்கிளில் ஒன்றினை முந்திச் செல்ல முற்பட்ட போது, இடம் தரவில்லை என, மோட்டார் சைக்கிளில் வந்த மூவரும் பேரூந்து சாரதியுடன் முரண்பட்ட நிலையில், பேரூந்தின் கண்ணாடிகளை அடித்து உடைத்து விட்டு, தப்பி சென்றுள்ளனர்.
குறித்த தாக்குதல் சம்பவத்தில் பேரூந்தில் இருந்த இருவர் காயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தாக்குதல் சம்பவம் தொடர்பில் பேரூந்தின் சாரதி யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
