மட்டக்களப்பு, வாழைச்சேனையில் பெண் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் எனத் தெரியவந்துள்ளது.
குறித்த கைது நடவடிக்கையானது இன்றைய தினம் (8) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், ஆயித்தியமலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வரும் அம்பாறை மாவட்டத்தைச் சோந்த பொலிஸ் அதிகாரி வாழைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை திருமணம் செய்ய முடிவு செய்திருந்தார்.
இந்த நிலையில், விடுமுறையில் வீடு சென்ற குறித்த பொலிஸ் அதிகாரி சம்பவ தினமான நேற்று திருமணம் முடிக்க இருந்த பெண்ணின் வீட்டுக்கு சென்ற நிலையில் அங்கு இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாய்தர்க்கத்தை அடுத்து பெண்ணை தாக்கியுள்ளார்.
இதனையடுத்து, காயமடைந்த குறித்த பெண் மட்டு. போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில், பொலிஸாருக்கு பெண் வழங்கிய முறைப்பாட்டையடுத்து குறித்த பொலிஸ் அதிகாரி இன்று வாழைச்சேனையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனையடுத்து, கைது செய்தவரை வாழைச்சேனை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.