ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் கடந்த மாதம் 22ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு, பாகிஸ்தானை தலைமையிடமாகக் கொண்ட லஷ்கர் இ தொய்பா அமைப்பின் கிளை அமைப்பான ‘தி ரெசிஸ்டண்ட் பிரண்ட்’ அமைப்பு பொறுப்பேற்றது. இதனால் இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டது.
இந்த நிலையில், பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இன்று இந்தியா, பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் பயங்கரவாத முகாம்களை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. “ஆபரேஷன் சிந்தூர்” என பெயரிடப்பட்ட இந்த தாக்குதலில் பாகிஸ்தானில் 3 பேர் உயிரிழந்தனர். பாகிஸ்தானின் பஹ்வல்பூர், கோட்லி மற்றும் முசாபராபாத் நகரங்கள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்தியாவின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என பாகிஸ்தான் எச்சரிக்கை விடுத்துள்ளது. பாகிஸ்தான் ராணுவ ஊடக பிரிவு தலைவர் அகமது ஷெரீப் சவுதிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்த தாக்குதல் இந்தியாவின் கோழைத்தனமான நடவடிக்கையாகும். பாகிஸ்தான் தனது பதிலடிக்கான நேரத்தையும் இடத்தையும் தீர்மானிக்கும்” என தெரிவித்தார்.