திருகோணமலை மாவட்ட தம்பலகாமம் பிரதேச செயலகத்துக்குட்பட்ட 49 ஆவது பிரதேச மட்ட விளையாட்டு விழா அண்மையில் முள்ளிப்பொத்தானை ஈச்ச நகர் விளையாட்டு மைதானத்தில் இடம் பெற்றது.
குறித்த பிரதேச மட்ட போட்டியில் தம்பலகாமம் பிரதேச செயலகத்துக்குட்பட்ட பதிவு செய்யப்பட்ட 43 விளையாட்டு கழகங்கள் பங்குபற்றின. இதில் சிறு விளையாட்டுக்கள் மற்றும் பெரு விளையாட்டுக்கள் என்பன இடம்பெற்ற நிலையில் கிரிக்கெட், எல்லே, கபடி, கரப்பந்து, மெய்வல்லுனர் போட்டிகள் இடம்பெற்றன. இறுதிப் போட்டிக்கு அரபா கழகமும், ஈச் கழகமும் தெரிவாகியதுடன் ஒட்டு மொத்த சம்பியனாகவும் தெரிவாகியது.
குறித்த போட்டியில் வெற்றியீட்டியவர்களுக்கான சான்றிதழ்களும், கேடயங்களும் இறுதிப் போட்டி நிகழ்வின் போது வழங்கி வைக்கப்பட்டன. குறித்த போட்டியில் வெற்றியீட்டியவர்கள் மாவட்ட மட்டங்களுக்கு அழைத்து செல்லப்படவுள்ளனர். இவர்களுக்கான விளையாட்டு பயிற்சிகளை தம்பலகாமம் பிரதேச செயலக விளையாட்டு உத்தியோகத்தர் கே.எம்.ஹாரிஸ் திறம்பட வழங்கி வருகின்றார்.
இறுதிப் போட்டிக்கு பிரதம அதிதியாக தம்பலகாமம் பிரதேச செயலாளர் திருமதி ஜெயகௌரி ஸ்ரீபதி மற்றும் கடல்சார் சுற்றுச் சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் வடகிழக்கு உதவிப் பணிப்பாளர் ஸ்ரீபதி மற்றும் மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் விமலசேன உட்பட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.





