இலங்கையின் மிக உயரமான இராஜ கோபுரத்தினையுடைய தேற்றாத்தீவு கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலய பிரம்மோற்சவப் பெருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
இன்று காலை களுவாஞ்சிகுடி மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்தில் இருந்து கொடிச்சீலை யானை மீது வைக்கப்பட்டு ஆயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ கலை நிகழ்வு பவனியுடன் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டது. தொடர்ந்து ஆலயத்தை வந்தடைந்த கொடிச்சீலைக்கு வீசேட பூசை நடைபெற்று வசந்த மண்டப பூசையைத் தொடர்ந்து கொடிச்சீலை கொடித்தம்பத்துக்கு கொண்டு வரப்பட்டது.
ஆலயத்தின் பிரதகுரு சிவஸ்ரீ விநாயகமூர்த்தி குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியர்கள் உற்சவக்கிரியைகளை நடாத்தினார்கள். இதன் போது விசேட பூஜைகள் நடைபெற்றதைத் தொடர்ந்து நாத மேள, பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் கொடியேற்றம் நடைபெற்றது. இப் பிரம்மோற்சவ பெருவிழாவின் போது புஷ்பாஞ்சலி திருவிழா, கற்பூரஜோதி திருவிழா, சதுர்வேதகோஷ திருவிழா, பஞ்சமுக அர்ச்சனை, திராவிடதோத்திரம், மாம்பழத் திருவிழா திருவேட்டை திருவிழா இடம் பெற்று ஒன்பதாம் நாள் காலை சித்திர தேரோட்டமும் நடைபெறவுள்ளது.



