வாழைச்சேனை வை.அஹமட் வித்தியாலயத்தில் மர்ஹூம் அல்ஹாஜ் அஹமட் உசனார் தம்பதிகளின் குடும்ப உறுப்பினர்களால் அன்பளிப்புச் செய்து தரப்பட்ட கற்றல் வள நிலையத்தை (சிறுவர் நூலகம்) பாடசாலைக்கு கையளிக்கும் அங்குரார்ப்பண நிகழ்வு பாடசாலையில் இடம்பெற்றது.
பாடசாலையின் நீண்ட கால தேவைகளின் ஒன்றாக இருந்து வந்த சிறுவர் நூலகத்தின் அவசியம் குறித்து வாழைச்சேனை பிரதேசத்தில் நல்ல பல ஆளுமைகளை உருவாக்கிய மர்ஹூம் அல்ஹாஜ் அஹமட் உசனார் அவர்களின் ஞாபகார்த்தமாக பாடசாலையில் அமைத்து தருமாறு அவரது புதல்வர்களிடம் வைத்த கோரிக்கையின் பயனாக எமது வித்தியாலயத்தில் கடந்த மூன்று மாதங்களாக நூலகம் அமைக்கும் பணிகள் இடம்பெற்று வந்த நிலையில் உத்தியோகபூர்வமாக மாணவர்கள் நலன் கருதி பாடசாலைக்கு கையளிக்கப்பட்டது.
அதிபர் ஷல்மானுல் ஹரீஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி கோட்டக்கல்வி பணிப்பாளர் ஏ.எம்.எம்.தாஹிர் மற்றும் மட்டக்களப்பு மத்திய உதவிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.அபுல்ஹஸன் ஆகியோர் கலந்து கொண்டதுடன் இஸ்லாம் பாட ஆசிரிய ஆலோசகர் மௌலவி அஷ்ஷெய்க் கடாபி சிறாஜி மற்றும் தகவல் தொழில்நுட்ப ஆசிரிய ஆலோசகர் எம்.பீ.டி.கான் மற்றும் ஓட்டமாவடி எக்ஸலன்ட் கொலேஜ் பணிப்பாளர் எம்.எஸ்.ரயீஸ் நளீமி மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர் ஏ.சீ.எம்.முனவ்பர் ஆகியோரும் அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர்.
மேலும் மர்ஹூம் அல்ஹாஜ் அஹமட் உசனார் தம்பதிகளின் குடும்ப உறுப்பினர்களில் இருந்து பிரதேச பொது வைத்தியர் ஏ.யூ.அபுல்கலாம்(எம்.பீ.பீ.எஸ்) மற்றும் புகையிரத நிலைய அதிபர் ஏ.யூ.நுபைஸ் மற்றும் அதிபர் சேவைகள் உத்தியோகத்தர் நஜ்முன்ஷிபா மற்றும் அவர்களின் பிள்ளைகளான ஆசிரியர்கள் பலரும் கௌரவ அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர்.
செல்வங்கள் அதிகரித்த பிறகு அதனை சரியான முறையில் செலவு செய்யத் தெரியாமலும், அறக்கொடைகளை வழங்கி நன்மைகளை அடைந்து கொள்வதில் கஞ்சத்தனம் காட்டும் நிலைமைகள் பிரதேசங்களில் அதிகரித்துள்ள தற்போதைய காலகட்டத்தில் இவ்வாறு பாடசாலைக்கு முன்வந்து நல்ல பிள்ளைகளை உருவாக்கிய ஒரு தந்தைக்காக அவர்களது பிள்ளைகள் பல லட்சம் செலவில் ஒரு நூலகத்தை அமைத்து கொடுத்தமையானது பெரிதும் பாராட்டப்பட வேண்டிய விடயம் என அதிபர் தமது உரையில் தெரிவித்தார்.
மேலும் இந்த நூலகத்தை பாவிக்கும் காலம் எல்லாம் மர்ஹூம் அல்ஹாஜ் அஹமட் உசனார் தம்பதிகளின் வாழ்வு சிறப்பாக அமையும் என்பதோடு அந்நூலகத்தை உயிர்ப்புடன் பாடசாலை நிர்வாகம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கோட்டக் கல்வி பணிப்பாளர் தமது உரையில் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் நூலகத்தின் அவசியம் குறித்து மாணவர்களால் கவிதை மற்றும் உரைகள் நிகழ்த்தப்பட்டதுடன் நூலகத்தின் சாவி உத்தியோகபூர்வமாக அதிபர் அவர்களிடம் குடும்ப உறுப்பினர்களால் கையளிக்கப்பட்டது.
விசேட பிரார்த்தனைகள் இடம்பெற்றதுடன் பாடசாலையில் கற்கும் அனைத்து மாணவர்களுக்கும் இனிப்பு வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.



