வடக்கில் 5,941ஏக்கர் தமிழ் மக்களின் காணிகளை அபகரிக்கும் வகையிலான வர்த்தமானியொன்றை அரசு வெளியீடு செய்யப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க குறித்த வர்த்தமானியை மீளக் கைவாங்காமல் வடக்கு மாகாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளக்கூடாதெனவும் அவர் இதன் போது மிக்கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
முல்லைத்தீவு – கள்ளப்பாடு வடக்குப்பகுதியில் அமைந்துள்ள வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் இல்லத்தில் 02.05.2025 நேற்று குறித்த வர்த்தமானி மூலமான காணி அபகரிப்புத் தொடர்பான விடயங்கள் தொடர்பிலும், அதை எதிர்கொள்வதற்கான சட்ட ஆலோசனைகள் தொடர்பிலும் எம்.ஏ.சுமந்திரன் தலைமையிலான சட்டத்தரணிகள் குழுவினரால் மக்களுக்கு தெளிவூட்டப்பட்டது.
இந்நிலையில் குறித்த தெளிவூட்டல் கலந்துரையாடலில் பங்கேற்றுக் கருத்துத் தெரிவிக்கும் போதே எம்.ஏ. சுமந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், “காணி நிர்ணயக் கட்டளைச் சட்டத்தின் மூலம் வடக்கு மாகாணத்திலுள்ள தமிழ் மக்களுக்குரிய 5,941ஏக்கர் கரையோரப்பகுதிக் காணிகளை அரசு கையகப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. கடந்த 28.03.2025 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வர்த்தமானியில் குறித்த காணி அபகரிப்பு தொடர்பிலான அறிவிப்புக்கள் வெளியாகியுள்ளன.
குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் முள்ளிவாய்க்கால் கிழக்கு, முள்ளிவாய்க்கால் மேற்கு, வலைஞர்மடம் உள்ளிட்ட பல்வேறு கரையோரப் பகுதிகளில் மொத்தம் 1,703ஏக்கர் காணிகள் அபகரிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், யாழ்ப்பாண மாவட்டத்தில் 3,669 ஏக்கர் காணிகளும், கிளிநொச்சி மாவட்டத்தில் 515ஏக்கர் காணிகளும், மன்னாரில் 54ஏக்கர் காணிகளையும் அபகரிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்நிலையில் இவ்வாறு அரசால் மேற்கொள்ளப்படுன்ற காணி அபகரிப்பு முயற்சிக்கெதிராக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் மக்களுக்கு சட்ட ஆலோசனைகளை வழங்குவதுடன், தமிழ் மக்களின் காணிகளை அபகரிக்கும் குறித்த வர்த்தமானியை இலங்கை அரசு மீளக் கைவாங்குவதற்குரிய சட்ட நடவடிக்கைகளையும் மேற்கொண்டுவருகின்றார்.
அதன் ஒரு கட்டமாக 02.04.2025 நேற்று முல்லைத்தீவு – கள்ளப்பாடு வடக்குப் பகுதியில் அமைந்துள்ள வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களது இல்லத்தில் குறித்த காணி அபகரிப்பு விடயம் தொடர்பில் ஜனதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், சட்டத்தரணி கேசவன் சயந்தன் உள்ளிட்டவர்களால் மக்களுக்குத் தெளிவூட்டப்பட்டதுடன், சட்டஆலோசனைகளும் வழங்கப்பட்டன.
இதன் போது இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் கருத்துத் தெரிவிக்கையில், “இவ்வாறு தமிழ் மக்களின் காணிகளை ஆக்கிரமிப்புச் செய்யும் நோக்கில் வெளியிடப்பட்ட வர்த்தமானியை மீளக்கைவாங்காமல், அரசதலைவர் அனுரகுமார திசாநாயக்க வடக்கிற்கு விஜயம் மேற்கொள்ளக்கூடாதென மிகக் கடுமையாக எச்சரிக்கை விடுக்கின்றோம்.
அத்தோடு தமிழ் மக்கள் பரம்பரை பரம்பரையாக ஆட்சி செய்துவந்த நிலங்களை ஒரு நொடியில் அரசநிலங்களாக மாற்றுவதற்குரிய செயற்பாடே இந்த வர்த்தமானி அறிவித்தலாகும்.
இவ்வாறு குறித்த வர்த்தமானி அறிவித்தலின் மூலம் ஆக்கிரமிப்பதற்காக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட இடங்களில் காணிகள் உள்ள தமிழ் மக்கள் உடனடியாக தமது காணிகளை உரிமை கோரவேண்டும்.
குறித்த பகுதிகளில் காணிகள் உள்ளவர்கள் புலம்பெயர்ந்திருப்பின் உடனடியாக வெளிநாடுகளிலிருந்து வருகை தந்து அக்காணிகளை உரிமை கோரவேண்டும். வெளிநாடுகளில் இருந்து வருகை தருவது கடினமாக இருப்பின், உடனடியாக அந்தக் காணி உரிமையை இங்குள்ள உறவினர்களுக்கு வழங்குவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு தமிழ் மக்களின் காணிகள் அபகரிக்கப்பட்டு அரசகாணியாக்குவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. அதற்கு இங்குள்ள தமிழ் மக்களும் அனுமதிக்கக்கூடாது.
அதேவேளை பெரும்பாலான தமிழ் மக்கள் வெளிநாடுகளில் அகதிகளாகத் தங்கியிருக்கின்றனர். குறிப்பாக பெரும்பாலான தமிழ் மக்கள் இந்தியாவிலும் அகதிகளாகத் தங்கியுள்ளனர். அவ்வாறு இங்குள்ள தமிழ் மக்கள் அகதிகளாகத் தங்கியுள்ளனர்.
இத்தகைய சூழல்கள் இருக்கும்போது தமிழ் மக்களின் காணிகளை ஆக்கிரமிக்கும் நோக்கில் இவ்வாறு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டி இந்த வர்த்தமானியை மீளக் கைவாங்குவதற்கு நீதிமன்றை நாடவுள்ளோம்.
மேலும் அரசதலைவர் அனுரகுமார திசாநாயக்க இவ்வாறு தமிழ் மக்களின் காணிகளை அரசகாணிகளாக்குவதற்கு முயற்சிகளை மேற்கொண்டு விட்டு, கடந்த முதலாம் திகதி யாழ்ப்பாணத்திலே 40ஏக்கர் காணிகளை விடுவிப்பதாக ஒரு கண்துடைப்பு நாடகத்தை நடாத்தியுள்ளார்”என்றார்.



