“எதிர்க்கட்சியினர் தேர்தலில் எவ்வாறான யுக்திகளைப் பயன்படுத்த வேண்டும் என்று வெல்வதற்குத் தேவையான ஆலோசனைகள் தேவைப்பட்டால் வழங்கத் தயார்” என தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ம. ஜெகதீஸ்வரன் தெரிவித்தார்.
வவுனியாவில் இன்று (02.05) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் பாேதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடரந்தும் கருத்து தெரிவித்த அவர், “மே தினத்திற்கு காலி முகத்திடலில் திரண்டவர்களை பார்க்கின்ற போது தேசிய மக்கள் சக்தியை மக்கள் விரும்புகின்றார்கள். அது அபிமானம் மிக்க கட்சியாக மக்கள் மத்தியில் காணப்படுகின்றது என்பது தெளிவாகின்றது.
இந்த நிலையில் வடமாகாணத்திலும் தேசிய மக்கள் சக்தியின் வெற்றி உறுதிப்படுத்தப்பட்டு இருக்கின்றது. இதற்குக் காரணம் என்னவென்றால் எதிர்க்கட்சிகள் தேசிய மக்கள் சக்திக்கு சேறு பூசும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமையே காரணமாகக் காணப்படுகின்றது.
உண்மையில் அவர்கள் இவ்வாறான செயற்பாட்டை மாற்றி இதுவரை காலமும் என்ன செய்தார்கள், இனி என்ன செய்யப் போகின்றார்கள் என்பதனை கூறுவார்களாக இருந்தால் அது ஆக்க பூர்வமானதாக இருக்கும். அது அவர்கள் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பாகக் கூட இருக்கலாம்.
எனவே அவர்கள் தேர்தல் யுக்திகளை மாற்றி அமைப்பது தான் சிறப்பு. எனவே அவர்கள் எதிர்வரும் தேர்தல்களிலாவது தேர்தல் யுத்திகளை மாற்றி வெற்றி பெறுவதற்கு முயற்சிக்கலாம்.
தேவை ஏற்பட்டால் எதிர்க்கட்சியினர் தேர்தலில் எப்படி யுக்திகளை பயன்படுத்த வேண்டும் எவ்வாறு ஆக்கபூர்வமான செயற்பாட்டை முன்னெடுக்கலாம் என்பது தொடர்பான ஆலோசனைகள் தேவைப்பட்டால் அதனை வழங்குவதற்கு நான் தயாராகவே இருக்கின்றேன்” எனத் தெரிவித்தார்.