எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கொள்கைப் பற்றுள்ள தமிழ்த் தேசிய கட்சிகளுக்கு வாக்களிக்குமாறு வவுனியா நகரில் துண்டுப்பிரசுங்கள் விநியோகிக்கப்பட்டது.
தமிழ்த் தேசிய செயற்பாட்டுக் குழுமத்தால் குறித்த விழிப்புணர்வு செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது கருத்து தெரிவித்த அவர்கள், “வரலாறு எமக்கு வழிகாட்டி. வட கிழக்கு தமிழர்க்கு வழிகாட்ட தென்பகுதி சிங்களத் தலைமைகள் தேவையில்லை.
வலிசுமந்து, உடமையிழந்து, உறவையிழந்து அனைத்துலக நீதிக்காய் அல்லும் பகலும் உழைக்கும் இவ்வேளையிலே பகட்டுக்காகவும், பம்மாத்து வார்த்தைகளுக்காகவும், பற்றுள்ள தமிழினம் சோரம் போகலாமா? உள்ளூராட்சி மன்றத் தேர்தல். இது உரிமைக்கான குரலை மழுங்கடிக்க கொழும்பு சிங்களக் கட்சிகளும், அவர்களோடு சோரம் போகும் எட்டப்பர் கட்சிகளும் எம்மண்ணில் ஏப்பம் விடுகின்றனர்.
ஏமாந்து யாராவது அப்படியான இறக்குமதி கட்சிகளுக்கு வாக்களித்து எமது வரலாற்றை மாற்ற வேன்டாம். தமிழ்த் தேசிய கட்சிகளுக்கு மட்டும் தமிழர்களாக வாக்களிப்போம். தனி நபர்கள், வேண்டாதவர்கள் தமிழ் தேசிய கட்சிகளில் இருந்தால் அவர்களை ஒதுக்கிவிட்டு கொள்கைப்பற்றாளர்கள் உள்ள தமிழ்த் தேசிய கட்சிகளுக்கு வாக்களிப்போம்”என்று தெரிவித்தனர்.


