வடக்கு கிழக்கில் தமிழ் மக்களின் இருப்பை வலுப்படுத்தவும் தமிழ்த் தேசியத்தை உறுதியாக நிலைநிறுத்த வேண்டிய பொறுப்பும், தமிழ் மக்களின் கைகளில் தான் இருக்கின்றது என கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. கிழக்கு மாகாணத்தில் உள்ள மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்றது. மூன்று மாவட்டங்களின் தலைவிகளும் இதில் கருத்து தெரிவித்தனர்.
இதன் போது கருத்து தெரிவித்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட தலைவி திருமதி அ.அமலநாயகி, இன்றைய ஊடகச் சந்திப்பில்,” உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ் மக்கள் யாருக்கு வாக்களித்து வடக்கு கிழக்கில் தமிழ் மக்களின் இருப்பை வலுப்படுத்தவும் தமிழ்த் தேசியத்தை உறுதியாக நிலைநிறுத்த வேண்டிய பொறுப்பும் தமிழ் மக்களின் கைகளில் தான் இருக்கின்றது.
ஆகவே எமது ஒற்றுமையை உள்ளூராட்சி தேர்தலின் ஊடாக வெளிப்படுத்துங்கள். சென்ற காலங்களில் ஆட்சியில் இருந்தவர்கள், இப்போது ஆட்சிக்கு வந்தவர்கள் இதுவரை காலமும் என்ன செய்தார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும்.
நாம் மறக்கவும் மாட்டோம். நமக்கு வாழும் உரிமை வேண்டும் என்று எங்களால் தெரிவு செய்யப்பட்டு, எமது பெறுமதியான வாக்குகளை கொடுத்து அனுப்பப்பட்டவர்களையும் ஒட்டுமொத்த தமிழ் மக்களை சிங்கள தேசிய அரசியல் கட்சிகளும், சிங்கள அரசும் ஏமாற்றி இருக்கின்றார்கள். தொடர்ந்து ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றோம்.
அது போல தான் தற்போது ஆட்சியில் இருக்கும் புதிய அரசாங்கமும் குறுகிய காலத்துக்குள் அது செய்வோம், இது செய்வோம், காணிகளை விடுவிப்போம், வேலை வாய்ப்பு வழங்குவோம், வீதிகளை திறப்போம், காணாமல் ஆக்கப்பட்டவர்களை கண்டறிவதே எமது வேலைத் திட்டம் எனக் கூறி இப்போது மூன்றாவது தேர்தலையும் நடத்தி முடிப்பதற்கு துரிதமாக வேலை செய்கிறார்கள். குறுகிய காலத்திற்குள் தேர்தலை முடிக்கிறார்களே தவிர தெருவில் கண்ணீரோடு நீதி கேட்டு நிற்கின்ற தாய்மாருக்கு என்ன உண்மையைக் கண்டறிந்து சொன்னார்களை? தீர்வு, பதில் தந்தார்களா ? எதுவுமே நடக்கப் போவது இல்லை.
ஆகவே இந்த நேரத்தில் உறவுகளே நீங்கள் விழிப்பாக இருங்கள். உள்ளூராட்சித் தேர்தல் எங்களுக்கு உரிய தேர்தல். எங்கள் மாவட்டத்திற்கு எங்களது கிராமத்திற்கு உரித்தான தேர்தல். எமது உள்ளூராட்சி சபைகளுக்கு ஊடாக ஒரு குறைந்த அளவு பிரதேச அபிவிருத்தியை மேம்படுத்தலாம்.இந்தச் சபைக்கு ஊடாக புறப்படும் பெருமளவு நிதி மக்களுடையது. அப்பணம் அப்பிரதேச அபிவிருத்திக்கு பயன்படுத்தப்பட வேண்டும். எனவே தமிழ் மக்களாகிய நாங்கள் சிங்கள கட்சியினருக்கும், சர்வதேசத்திற்கும் நமது ஒற்றுமையை எடுத்துக்காட்டும் முகமாக ஒட்டு மொத்த தமிழ் மக்களின் இருப்பிற்கும், நிரந்தர அரசியல் தீர்வுக்குமாக தமிழ்த் தேசிய பற்றோடும், உணர்வோடும் பயணிக்கின்ற தமிழ்த் தேசிய கட்சிகளுக்கு மட்டும் உங்களுடைய பெருமதியான வாக்குகளை அளியுங்கள்.
எங்களுக்கான சபைகள் எமது கைகளுக்கு வரும் போதுதான் நமக்கான பலம் எமது கைக்கு வரும். ஆகவே மண்ணுக்காக, மக்களுக்காக, எம் இனத்தின் நிரந்தர விடுதலைக்காக பயணிப்பவர்களுக்கு உங்கள் பொன்னான வாக்கை அளித்து வெல்ல வையுங்கள்.
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் என்கின்ற அடிப்படையில் தற்போது இருக்கின்ற அரசாங்கத்தின் செயற்பாடுகள் பற்றி உங்களது நிலைப்பாடு என்ன? இது சர்வதேசத்திற்கும், கால இழுத்தடிப்பிற்கும் அதாவது சர்வதேசத்தின் அணுகுமுறையினை தொடர்ந்து பேணுவதற்கான தந்திரோபாயமாகத்தான் நாங்கள் இதனை அவதானிக்கின்றோம். உதாரணமாக நாங்கள் 15 வருடங்களாக வீதியில் இறங்கி இந்த இந்த நபர்கள் தான் கொண்டு சென்றார்கள் என்பதை பற்றி நாங்கள் அழுது கொண்டு இந்த ஊடகங்கள் ஊடாக வெளிப்படுத்தி வருகின்றோம். தற்போது ஒரு சிலர் அவர்களை கைது செய்து கொண்டு வைத்து விட்டு விசாரிக்கின்றார்கள். நமக்குத் தேவை அம்பு இல்லை அம்பை எய்தியவன் கண்டுபிடித்து கூற வேண்டும். அதைத்தான் நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.
இதே சூட்சுமத்தை தான் இந்த அரசாங்கமும் கண் துடைப்பிற்காக அதாவது ஒரு தீர்வை காணப்போகின்றோம், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் வலிகள் அனைத்துமே எமக்குத் தெரியும், எமது சகோதரம் காணாமல் ஆக்கப்பட்டிருக்கின்றது என்று அனைத்தையும் அவர் கூறுகின்றார்.
பட்டலந்த சித்திரவதை முகாமைக் கூட அவர் பிரச்சினையாக எடுத்தார். அதே போன்று கிழக்கு மாகாணத்தில் எத்தனையோ முகாம்கள் காணப்படுகின்றது. பற்பொடி கம்பனி, வெலிகந்த முகாம், கொண்ட வெட்டுவான் முகாம் இவ்வாறு எத்தனையோ முகாம்கள் காணப்பட்டது. இதற்கான பிரதான சூத்திரதாரிகள் இவற்றை யார் செய்தார்கள். நமது உறவுகளை யார் கொன்று சென்றார்கள். அந்த விசாரணைகளை அவர் ஏன் முன்னெடுக்கவில்லை. இது சர்வதேசத்திற்கு ஓ.எம்.பி அலுவலகத்தை புதுப்பிப்பது போன்று நடித்து ஓ. எம். பி அலுவலகத்திற்கு உள் செல்லாதவர்களை உள் திணித்து பிரதேச செயலகங்கள் ஊடாக அழைக்கின்றார்கள்.
இவ்வாறு அவர்களை அழைத்து இரண்டு லட்சம் ரூபாய் பணம் கொடுக்கின்றார்கள். ஆனால் நாங்கள் இவ்விடத்தை பற்றிக் கேட்டால் சொல்லப்படுகின்ற விடயம் என்னவென்றால் அது இடைக்கால கொடுப்பனவு என்று, ஆனால் அந்த தாய்மாரிடம் கையெழுத்து பெற்றுவிட்டு கொடுத்து இருக்கின்றார்கள். இழப்பீடு தொகை என்று. ஆனால் இந்த ஓ. எம். பி அலுவலகத்தில் காணுமலாக்கப்பட்ட பதிவோ அல்லது சான்றிதழோ அல்லது மரண சான்றிதழும் தேவைப்படாது என்று கூறப்படுகின்றது. ஆனால் அப்பாவி மக்களை ஏமாற்றி கையெழுத்துகளைப் பெற்று, மரணப் பதிவுகளை கொடுத்து சர்வதேசத்திற்கு காட்டுகின்றார்கள். இறுதியாக இழப்பீட்டு பணமாக 2 லட்சம் ரூபாயை அவர்கள் சர்வதேசத்தில் காட்டுகின்றார்கள்.
இவ்வாறான சுற்று மாத்தான வேலைகளை தான் தொடர்ந்து வருகின்ற அரசுகளும் செய்து கொண்டு இருக்கிறார்கள். ஏன் என்றால் அவர்களை காப்பாற்றத்தான் பார்ப்பார்கள். அவர்களது இனம் அவர்களை காப்பாற்ற வேண்டும். மக்களை காப்பாற்ற வேண்டும். அதை செய்ய சொன்னது சிங்கள அரசு. அதை காப்பாற்றுவதற்காக அவர்களும் தத்துரூபாயமாக காய் நகர்த்துகின்றார்கள்.
ஜனாதிபதியாக இவர் வந்ததன் பின்னர் எங்களுக்கான வேலைத் திட்டமாக எதை செய்திருக்கின்றார்? எதுவுமே செய்யவில்லை. ஆனால் ஏதோ செய்வது போன்று மாயையை உருவாக்கி வைத்திருக்கின்றார். அதற்கு இளம் சமூகமும் துணை போகின்றார்கள். ஆகவே இந்த உள்ளூராட்சித் தேர்தல் ஊடாக எங்களுடைய மக்கள் இந்த இருப்பினை தக்கவைக்க வேண்டுமாக இருந்தால் உண்மையுடன், உணர்வுடன் தேசியத்தோடு பயணிக்கின்ற எமது இனத்துக்காக பயணிக்கின்ற அரசியல் கட்சிகளை. நாங்கள் யார் என்று கூற வரவில்லை. எமது மக்களுக்கு யார் உதவ போகின்றார்களோ, எமது இனத்துக்காக யார் குரல் கொடுக்கப் போகின்றார்களோ, எமது பிரச்சினைகளுக்கு தீர்வு யார் காணப் போகின்றார்களோ, எமது அபிவிருத்திகளை யார் செய்யப் போகிறார்களோ, எமது மக்களுக்கு தேவையான அபிவிருத்திகளை.
ஜனாதிபதி எமது மாவட்டத்திற்கு வந்த போது கூறி இருக்கின்றார். இந்தத் தேர்தலில் எமக்கு வாக்களித்தால் தான் நிதியினை ஒதுக்க முடியும் என்று. மட்டக்களப்பு மக்களுக்கு இவ்வாறு கொடுக்க வேண்டும் என்று கூறுபவர், யாருடைய பணத்தை யாருக்கு வழங்குவதற்கு அவ்வாறு அவர் கூறுகின்றார். எமது வரிப் பணம் உள்ளுராட்சி மன்றத்திற்குள் வருகின்ற நிதிகள் அனைத்தும் மக்களுடைய வரிப்பணம் அதனை உமக்கு வாக்களித்தால் தான் ஒதுக்குவோம் என்று ஒரு ஜனாதிபதி கூற முடியாது அல்லவா.இவ்வாறு தான் அவர் ஒவ்வொரு விடயங்களையும் கடத்திக் கொண்டு செல்கின்றனர்.
புதிய அரசாங்கம் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான நீதியை பெற்றுத் தருவார்கள் என நீங்கள் நம்புகிறீர்களா,…..?
ஒரு வீதம் கூட நாங்கள் நம்பவில்லை. ஏன் என்றால் அவர்கள் அதற்கான எதுவித அடிப்படை தேவையில் இருந்து கூட அவர்கள் செல்லவில்லை. ஏன் என்றால் இன்னமும் நாங்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு கொண்டுதான் இருக்கின்றோம். எது விதமான மாற்றங்களும் இல்லை. இன்றும் நம்மை விசாரிக்கின்றார்கள். பின் தொடர்கின்றார்கள். அச்சுறுத்துகின்றார்கள். புதிய அரசாங்கம் ஏதோ செய்யப் போகின்றது என்று கூறுகின்றார்கள். ஏன் அவர்கள் எம்மை விசாரிக்க வேண்டும். எமது உறவுகளை கடத்திச் சென்றவர்களை நாங்கள் சுட்டிக் காட்டுகிறோம். அவர்களை இவர்கள் இன்னமும் விசாரிக்கவில்லை. எங்களை விசாரணை செய்ய வருகின்றார்கள். அம்புகளை விசாரிப்பதை விட்டுவிட்டு அம்பை எய்தவனை விசாரிக்க வேண்டும்.
உப்பு தின்றவன் தண்ணி குடித்துத் தான் ஆக வேண்டும் காலம் கடந்தாலும் எமது கண்ணீருக்கு பதில் இருக்கின்றது. கடந்த காலங்களில் கண்ணீரோடு நாங்கள் எத்தனையோ தாய்மார்கள் கூறினார்கள். பிள்ளையான் கொண்டு சென்று விட்டான். கருணா கொண்டு சென்று விட்டான். என்னுடைய புள்ளையை கொண்டு சென்றது இவர்கள்தான் என்று. ஆனால் என்னை பொறுத்தளவில் நான் பார்ப்பது அவர்கள் குற்றம் செய்தவர்கள் தண்டனை அனுபவிக்க வேண்டு.ம் ஆனால் இந்த அரசாங்கம் காப்பாற்றுகின்ற ஒரு யுக்தியை கையாளுகின்றதா என்று எமக்கு தெரியவில்லை. ஏனென்றால் கைது செய்வது போன்று கைது செய்து தமது தேர்தல் காலங்களில் அரசை தக்க வைத்துக் கொள்வதற்காக ஒரு இவ்வாறான செயற்பாட்டை செய்கின்றார்களா என்று எமக்கு தெரியாது. அதைத்தான் நாங்கள் கூறுகின்றோம் காலம் கடந்தாலும் எங்களுடைய கண்ணீர்களுக்கு, எமது தாய்மார்களின் கண்ணீர்களுக்கு பதில் வரும். ஆனால் உண்மையான அம்பை தேடாமல் அம்பை எய்தவனை, குற்றம் செய்த அரசாங்கம் இந்த இன அழிப்பை செய்த இந்த அரசு ஜனாதிபதியாக இருந்தாலும் அவர்கள் விசாரணை செய்ய வேண்டும்.
அதற்கான தண்டனை கிடைக்கப் பெற வேண்டும். இதற்கு சர்வதேசம் முன் நின்று சரியான ஒரு அழுத்தத்தை கொடுக்க வேண்டும். அதற்கான தீர்வை எமது மக்களும் ஏதோ சலுகைக்காக நமது சாப்பாட்டுக்காக நாங்கள் கஷ்டப்பட்டோம். ஒரு தீப்பெட்டியை கொண்டு செல்வதற்கு கஷ்டப்பட்டோம். ஒரு தேநீர் அருந்துவதற்கும் கஷ்டப்பட்டோம். ஒரு பொருட்களையும் கொள்முதல் செய்து சாப்பிட முடியாத நிலையில் இருந்தோம். ஆனால் நமக்குத் தேவை எமது உறவுகளுக்கு என்ன நடந்தது.
இந்த சலுகைகளுக்காக எமது இனத்தின் இருப்பை கைவிட்டு விட வேண்டாம். அனைத்து பொது மக்களிடமும், அனைத்து தமிழ் மக்களிடமும் எமது இருப்பு முக்கியம். நமது சந்ததிக்கு எமது இருப்பு முக்கியம். நமது இனம் முக்கியம். அதற்காக இந்தத் தமிழ் தேசியத்தோடு பயணிக்கின்ற எந்த அரசியல் கட்சிகளுக்காக இருந்தாலும் உமது வாக்குகளை அளித்து எங்களுடைய சர்வதேசத்திற்கும், சிங்கள தேசிய அரசியலுக்கும் உங்களுடைய ஒற்றுமையை எடுத்துக் காட்ட வேண்டும்” எனத் தெரிவித்தார்.


