சுரண்டல், ஒடுக்கு முறை மற்றும் அடக்கு முறைக்கு எதிராக மக்கள் திட்ட வரைபு ஒன்றியம் ‘விவசாய சக்தியைக் கட்டியெழுப்புவோம்’ எனும் தொனிப் பொருளில் முன்னெடுக்கப்பட்ட விவசாய மே தினப் பேரணி மற்றும் கூட்டம் இன்று மாலை மன்னாரில் இடம் பெற்றது.
இன்று மாலை 2 மணி அளவில் மன்னார் பொது விளையாட்டு மைதான வீதியில் இருந்து மே தினப் பேரணி ஆரம்பமானது.
குறித்த பேரணியில் நாட்டின் பல பாகங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டதோடு பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு பிரதான வீதியூடாக மன்னார் பஜார் பகுதியை நோக்கிச் சென்றனர்.
இதன் போது பேரணியில் கலந்து கொண்டவர்கள் “பயங்கரவாத தடைச் சட்டத்தை உடனடியாக நீக்கு, அனுர அரசே காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு பதிலைத் தா ,அரசியல் கைதிகளை உடனே விடுதலை செய், விவசாய காணிகளை விகாரைக்கு பறிக்காதே, காற்றாடி செயல் திட்டத்திற்கு அனுமதி அளிக்காதே, கச்சதீவைத் தாரை வார்க்காதே, இந்திய இழுவைப் படகுகளின் வருகையை நிறுத்து , காணி அபகரிப்பையும், அத்து மீறிய குடியேற்றத்தையும் நிறுத்து” உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை எழுப்பியவாறு பேரணியில் மக்கள் கலந்து கொண்டனர்.
பேரணியாக சென்றவர்கள் மன்னார் பஜார் பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்ட மே தினக் கூட்டத்தில் பங்கு கொண்டனர். இதன் போது அடக்குமுறைக்கும், வளச் சுரண்டல்களுக்கும் எதிராக மே தினத்தை நினைவு கூறினர். குறிப்பாக இலங்கை ரீதியாக உள்ள தொழிலாளர்கள், விவசாயிகள், மீனவர்கள் அனைவரையும் ஒன்றினைத்து மே தின நிகழ்வு இடம் பெற்றது.
இதன் போது மன்னாரில் வளச்சுறண்டல்கள் இடம் பெற்று வருவதோடு, மீனவர்கள் பாதிப்பு மற்றும் காணிகள் அபகரிப்பு இடம் பெற்று வருகின்றமையும் கண்டித்துள்ளனர். மேலும் திட்டமிட்ட இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறல்கள் காரணமாக வடபகுதி மீனவர்கள் பாரிய நெருக்கடியைச் சந்திக்கிறார்கள்.
மேலும் தொடர்ச்சியாக மன்னாரில் உள்ள வளங்களை சுரண்டுகின்ற பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் திட்டமிட்டு முன்னெடுக்கப்படுகின்றது. இதனை கருத்தில் கொண்டு அதற்கு எதிராக குரல் கொடுக்கும் வரையில் இலங்கையில் உள்ள விவசாயிகள், மழையக மக்கள் அனைவரும் ஒன்றினைந்து மன்னார் நகரில் குறித்த மே தினக் கூட்டம் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த கூட்டத்தில் வடமாகாண மக்கள் திட்ட வரைபு ஒன்றியத்தின் பொதுச் செயலாளர் நடராஜா தேவகிருஷ்னன், வலவ விவசாயிகள் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பின் பிரதிநிதி சுதேஷ் கமகே , மன்னார் மாவட்ட மீனவ அமைப்புகளின் பிரதிநிதி என்.எம்.ஆலம், கிழக்கு மாகாண மக்கள் திட்ட ஒன்றிய பிரதிநிதி கே.ருசிக்க, சர்வதேசக் கிராமிய விவசாய இயக்கத்தின் தெற்காசிய வலய பிரதிநிதி விமுக்திக சில்வா, ரதுகள பழங்குடி மக்கள் தலைவர் சுதார வன்னி லத்துகே ஆகியோர் உரை நிகழ்த்தினர்.




