கனடா பாராளுமன்றத் தேர்தலில், பிரதமர் மார்க் கார்னி தலைமையிலான லிபரல் கட்சி அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று, நான்காவது முறையாக மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பொறுப்பேற்ற பின், அயல் நாடுகளுக்கான இறக்குமதி வரியை அதிகரித்து அறிவித்தார். இதனால் அமெரிக்காவிற்கும், கனடாவிற்கும் இடையிலான உறவுகள் மோசம் அடைந்தது. பின்னர் முன்னாள் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை ட்ரம்ப் தொடர்ந்து விமர்ச்சித்து வந்தார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான மோதலுக்கு மத்தியில், கனடா பிரதமர் தேர்தலில் வெற்றி பெற்ற மார்க் கார்னிக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
”ட்ரம்ப் உடன் மார்க் கார்னி பேசினார். பிரதமர் தேர்தலில் வெற்றி பெற்ற மார்க் கார்னிக்கு ட்ரம்ப் வாழ்த்து தெரிவித்தார். இரு நாட்டு தலைவர்களும் எதிர்காலத்தில் நேரில் சந்திக்க ஒப்புக்கொண்டனர்” என கனடா பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடாவை 51வது மாநிலமாக மாற்றுவோம் என ட்ரம்ப் கூறியது விமர்சனங்களை ஏற்டுத்தியது. இதன் பிறகு தற்போது பிரதமர் தேர்தலில் வெற்றி பெற்ற, மார்க் கார்னி ட்ரம்ப் மீது கடுமையான விமர்சனங்களை முன் வைத்தார்.
அவர், ”நான் பல மாதங்களாக எச்சரித்து வருவது போல அமெரிக்கா நமது நிலம், நீரை விரும்புகிறது. அமெரிக்கா நம்மை சொந்தமாக்கி கொள்ள விரும்புகிறது. அது ஒரு போதும் நடக்காது” என மார்க் கார்னி தெரிவித்தார்.