இலங்கையில் மக்களுடைய மனித உரிமைகள் மீறப்படுகிறது. மனித உரிமை என்பது இன, மத உரிமை. அவர்களுக்கு உள்ள அடையாளங்களுக்கான உரிமை. அடிப்படை மனிதவுரிமை என்பதில் உடை, உறையுள், உணவு, அவர்களுக்கான பாதுகாப்பு, சுகாதாரம், பொருளாதாரம் இவை அனைத்துமே இல்லாமல் செய்யப்படுகின்ற முறை இருக்கின்றது. அதை மாற்ற வேண்டும் என மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார்.
வவுனியா மாநகர சபையின் ஆறாம் வட்டாரம் கடை வீதி வேட்பாளரை ஆதரித்து கற்குழி பகுதியில் இடம்பெற்ற பிரச்சாரக் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
சந்தோசமாக இருக்கிறீங்களா? நான் ஏன் அதைக் கேட்கின்றேன் என்றால் குறுகிய நேரத்தில் ஏற்படுவது சந்தோசம் அல்ல. உறுதியான ஒரு மனநிலையை பெற்றுத் தர சமூக பாதுகாப்பு தேவைப்படுகிறது. உணவு, உடை, உறையுள் கிடைக்கப் பெற்றால் சரி என சந்தேசமாக வாழும் மக்களாக மாறியிருக்கின்றோம். அது பிழையான கருத்து. பாதுகாப்பான சமுதாயம், அபிவிருத்தி அடைந்த நிலை, சமூக அங்கீகாரம் என்பன எமக்கு தேவைப்படுகிறது. இவை அனைத்தும் கிடைத்தால் எமது எதிர்கால சந்ததி அச்சம் கொள்ளாது வாழக் கூடிய ஒரு சூழல் உருவாகும்.
இலங்கைத் தேசியம் ஒரு பாதுகாப்பான தேசியமா? இலங்கை மக்கள் அனைவரும் சந்தேசமாக இருக்கின்றார்களா? இலங்கை மக்களுக்கான இலவச கல்வி, சுகாதாரம், போக்குவரத்து, தொழில் வாய்ப்பு, மொழி உரிமை, பேச்சு உரிமை, பொதுப்போக்குவரத்து என்பன கிடைக்கக் கூடியதாக இலங்கை இருக்கிறதா? பெண்கள் பாதுகாப்பாக இருக்கிறார்களா?
இலங்கை பின்தங்கிய ஒரு நாடு. இலங்கையில் மக்களுடைய மனிதவுரிமைகள் மீறப்படுகிறது. மனிதவுரிமை என்பது இன, மத உரிமை. அவர்களுக்கு உள்ள அடையாளங்களுக்கான உரிமை. அடிப்படை மனிதவுரிமை என்பதில் உடை, உறையுள், உணவு, அவர்களுக்கான பாதுகாப்பு, சுகாதாரம், பொருளாதாரம் இவை அனைத்துமே இல்லாமல் செய்யப்படுகின்ற முறை இருக்கின்றது. அதை மாற்ற வேண்டும்.
அதனை மாற்றுவது கட்டாயமானதாகும். இலங்கையில் 100 இற்கு 51 சதவீதம் பெண்கள். வாக்காளர் பட்டியலில் 56 சதவீதம் பெண்கள். இந்த நிலைக்கு கூடுதலாக வாக்களித்தவர்கள் பெண்கள். இந்த தலைவிதிக்கு காரணம் நாங்கள் தான். இதனை திருத்த வேண்டிய கட்டாயமும் எமக்கே உளளது. பெண்களுடைய அரசியல் விழிப்புணர்வு கட்டாயம். பெண்களுடைய மாற்றம் மறுமலர்ச்சி யுகம் ஒன்றை ஆரம்பிப்பதற்கு பெண்களின் அரசியல் பங்கு அவசியமாகும். ஆதலால் இந்த உள்ளூராட்சி தேர்தலில் பெண்களை முன்னிறுத்தி உள்ளோம்.
வடக்கு மாகாணத்தில் இருக்கும் மக்கள் நாங்கள் யார் என்பதை அறியாதவர்கள் இருக்கின்றார்கள். அதேபோல் நாடாளுமன்றத்தில் இருக்கின்ற 159 பேரையும் பெயராளும், அடையாளத்தாலும் உங்களால் கண்டு கொள்ள முடியுமா? முடியாது. ஆனால் யார் என்று ஆராயாமல் அனுரகுமார திஸநாயக்க முன்வைத்த அரசியல் கொள்கைக்காகவே வாக்களிக்கப்பட்டது. நான் சிங்கள மக்கள் அதிகமாகவுள்ள பிரதேசததில் வசிக்கிறேன். ஆனால் இலங்கை வரலாற்றில் ஒன்றரை இலட்சம் வாக்குகளை பெற்றுள்ளேன். தமிழ் பிரதேசத்தில் கூட அப்படி எடுக்க முடியாது. ஆகவே இனவாதம் என்பதை குழிதோண்டிப் புதைக்கப்பட்டு விட்டது.
தமிழ், சிங்களம், முஸ்லிம் என்று பாராது நாட்டில் இதுவரை இருந்து வந்த முறைக்கு மாறாக முன்மாதிரியாக அரசியலை முன்னெடுத்துள்ளோம். புலம்பெயர் வாழ் மக்களிடம் பணம் பெற்று தாம் பொட்டலம் கட்டி எடுத்துச் செல்லும் கலாச்சாரம் இங்கு இருக்கின்றது. அதனை நாம் முற்றிலுமாக ஒழித்து கட்டுவோம். அவ்வாறான கீழ்தரமான அரசியலை நாம் செய்ய மாட்டோம். புலம்பெயர் மக்களிடம் நாம் பேசியுள்ளோம். கருத்தியல் ரீதியாக மாற்றத்தை ஏற்படுத்துமாறு கோரியுள்ளோம்.
6 மாதம் ஆகிவிட்டது என்ன செய்தார்கள் எனக் கேட்கிறார்கள். 16 இலட்சம் பாடசாலை மாணவர்களுக்கு 6000 ரூபாய் நிதி வழங்கியுள்ளோம். அரசாங்க ஊழியர்களுக்கு சம்பள உயர்வை வழங்கியுள்ளோம். முன்பள்ளி ஆசிரியர்களின் கொடுப்பனவை அதிகரித்து கொடுக்க எனது அமைச்சு ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முன்பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு 60 ரூபாயாக இருந்ததை 100 ஆக மாற்றியுள்ளேன். வெங்காயம், சீனி, முட்டை, எரிபொருள் என்பவற்றின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. வீண் விரயத்தை தவிர்த்து அநாவசிய செலவை குறைத்தமையால் தற்போது மக்கள் நலன்புரிகளை மேற்கொள்ள முடிந்துள்ளது.
உள்ளூராட்சி சபைகளுக்கு ஒதுக்கப்படும் நிதியை கள்ளக் கும்பலுக்கு, மோசடிக்காரருக்கு கொடுத்தால் என்ன நடக்கும். எங்களது வேலைத்திட்டத்தை புறக்கணிக்கின்ற எதிர்கட்சிகள் அமர்ந்திருந்தால் அபிவிருத்தி நடக்குமா? அரசாங்கத்துடன் இணைந்து செயற்படக் கூடிய பிரதேச சபைகள், நகரசபைகள், மாநகரசபைகள் தேவைப்படுகின்றன. இது குட்டி அரசாங்கம். மாநகரம், கிராமம் போன்றவற்றின் அபவிருத்திக்கானவை. ஆகவே கிராமக்களை ஒளி பெறச் செய்ய திசைகாட்டிக்கு வாக்களியுங்கள் எனத் தெரிவித்தார்.





