சர்வதேச தொழிலாளர் தினத்தன்று நடைபெறும் மே தின அணிவகுப்புகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் பொலிஸார் சிறப்பு போக்குவரத்து திட்டத்தையும் செயற்படுத்த உள்ளனர்.
வெளி மாகாணங்களில் நடைபெறும் மே தின அணிவகுப்புகள், கூட்டங்கள் மற்றும் கொண்டாட்டங்களுக்குத் தேவையான பாதுகாப்பு, போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் சாலைப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க, மாகாணங்களுக்குப் பொறுப்பான மூத்த டிஐஜிக்கள், மாவட்டங்களுக்குப் பொறுப்பான டிஐஜிக்கள் மற்றும் பிரிவுகளுக்குப் பொறுப்பான மூத்த பொலிஸ் கண்காணிப்பாளர்களுக்கு பொலிஸ் தலைமையகம் ஏற்கனவே தேவையான அறிவுறுத்தல்கள் மற்றும் உத்தரவுகளை பிறப்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
கொழும்பில் 15 இடங்களில் அணிவகுப்புகள், கூட்டங்கள் மற்றும் கொண்டாட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு நகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெறும் மே தின அணிவகுப்புகள், பேரணிகள் மற்றும் கொண்டாட்டங்கள் காரணமாக ஏதேனும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால், வாகன ஓட்டுநர்கள் அந்தப் பகுதிகளைத் தவிர்த்து மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸ் அறிவுறுத்தியுள்ளது.
மேலும் மாற்று வழிகள் தொடர்பான தகவல்கள் தேவைப்பட்டால் போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகளிடமிருந்து உதவி பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.