பஹல்கம் தாக்குதலின் எதிரொலியாக, இந்தியா – பாகிஸ்தானுக்கிடையிலான உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டுள்ளது. இருநாட்டு எல்லையில் போர் பதற்றமும் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் அரபிக்கடலில் நிலை நிறுத்தப்பட்டுள்ள இந்திய கடற்படை போர்க் கப்பல்கள் ஏவுகணை தாக்குதல்களை முறியடிக்கும் சோதனையில் ஈடுபட்டுள்ளது. இதை கடற்படை இன்று தெரிவித்தது.
இது குறித்து கடற்படை வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
போர் கப்பல்களில் இருந்து அச்சுறுத்தல்களாக வரும் ஏவுகணை தாக்குதல்களை முறியடிக்கும் ஏவுகணை ஒத்திகையில் இந்திய கடற்படை போர்க்கப்பல்கள் வெற்றிகரமாக நடத்தியுள்ளன. தொலை தூர இலக்கை தாக்கும் நடவடிக்கைகளுக்கு கடற்படை தளவாடங்கள் தயார் நிலையில் உள்ளன.
நாட்டின் கடல்சார் பாதுகாப்பை உறுதிசெய்ய, எவ்வித அச்சுறுத்தல்கள் எந்நேரம், எந்த வகையில் வந்தாலும் அவற்றை எதிர்கொள்ள கடற்படை தயார் நிலையில் இருக்கிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கடல் வழி தாக்குதல்களை எதிர்கொள்ளவும், சண்டையிடவும் கடற்படை தயார் நிலையில் இருப்பதை மேற்கண்ட ஒத்திகை வெளிக்காட்டுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.