மன்னாரில் இருந்து புத்தளத்திற்கு சொப்பின் பையுடன் வந்தவர்கள் இன்று பத்து கப்பல்களை வாங்கும் நிலையை அடைந்துள்ளனர். டக்ளஸ் எல்லா அரசிலும் அமைச்சராக இருந்தார். நாங்கள் யாரையும் பாரபட்சம் பாக்கமாட்டோம். பொதுமக்களின் பணத்தை ஊழல் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம் என்று சிவில் விமானபோக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
வவுனியாவில் இடம்பெற்ற பிரச்சாரக்கூட்டம் ஒன்றில் கலந்துகொண்ட பின்னர் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
சட்டம் சாதாரண மக்களுக்கே.
நாங்கள் எல்லோரும் ஒன்றிணைந்து எமது பிரச்சினைக்கு தீர்வு காண்பதே உண்மையான அரசியல். உங்களுக்கு தெரியும் இலங்கையில் சட்டமும் ஒழுங்கும் பெரிய மனிதர்களுக்கு இருக்கவில்லை. அது சாதாரண மக்களுக்காகவே இருந்தது. ஆனால் இன்று அதனை உங்களின் வாக்குகளின் மூலம் மாற்றியுள்ளோம். இன்று மிகப்பெரிய இலஞ்ச ஊழலில் ஈடுபட்ட முதலைகளை பிடித்து அவர்களுக்கு தண்டனை கொடுக்கும் வேலை நடக்கிறது. முன்னொரு காலத்தில் அமைச்சர்களை கண்டு பொலிசார் ஓடி ஒளிந்தார்கள். இன்று பொலிசுக்கு பயந்து அமைச்சர்கள் ஓடி ஒளியும் நிலையை நாங்கள் உருவாக்கியிருக்கிறோம்.
ராஜபக்சவே பெரிய முதலை.
கிளிநொச்சியில் ஒருவர் கேட்டார் வடமாகாணத்தில் இருக்கின்ற கள்வர்களை நீங்கள் பிடிக்கமாட்டீர்களா என்று. இங்கே இருக்கின்ற கள்வர்களையும் நாங்கள் பிடிப்போம். இங்கும் மன்னாரில் இருந்து புத்தளத்திற்கு சொப்பின் பையுடன் வந்தவர்கள் இருக்கின்றனர். இப்போது அவர்களது சொத்துக்கள் மூலம் பத்து கப்பல்களை வாங்க முடியும். டக்ளஸ் எல்லா அரசிலும் அமைச்சராக இருந்தார். நாங்கள் யாரையும் பாரபட்சம் பாக்கமாட்டோம். பொதுமக்களின் பணத்தை ஊழல் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம். பெரிய முதலைகள் கொழும்பிலே தான் இருக்கிறார்கள். ராஜபக்ச மிகப்பெரிய முதலை. நாமல், யோசித்த ஆகியோருக்கு பொதுமக்களின் பணத்தை சூறையாடியதற்காக வழக்குகள் பதிவு செய்துள்ளோம். எனவே உங்கள் வாக்குகள் மூலம் நாட்டின் சட்டமும் ஒழுங்கும் நிலைநிறுத்தப்பட்டிருக்கிறது. நாட்டின் பாதாளக் குழுக்களை உருவாக்கியது ராஜபக்சாக்களும், விக்கிரமசிங்காக்களும், பிரேமதாசாக்களுமே.
பெண்கள் பொட்டு வைத்தாலும் சோதனை.
முன்பு சோதனை சாவடிகளில் பெண்கள் பொட்டு வைத்துச்சென்றால் இருமுறை சோதனை செய்வார்கள். பொட்டு இல்லாவிடில் ஒரு தரம் செய்வார்கள், முஸ்லிம் மக்கள் என்றால் மூன்று தரம் செய்வார்கள், அதை மாற்றும் செயற்பாட்டை நாம் முன்னெடுத்துள்ளோம். நாங்கள் இந்த அரசை பொறுப்பெடுத்து 5 மாதங்களே ஆகின்றது. முச்சக்கரவண்டியை வேகமாக திருப்பலாம் பேருந்தையும் கப்பலையும் வேகமாக திருப்புவது கடினமே. பிழையான வழியில் சென்ற தேசத்தையே திருப்ப நாம் முற்பட்டுள்ளோம். உங்களுக்கும் எனக்கும் கிடைத்தது சொர்க்கமான பூமி அல்ல. வங்குரோத்தான ஒரு நாடு. ரணில் இந்த நாட்டை ஆண்ட போது டொலரின் பெறுமதி காலை ஒரு விலையிலும் மாலை ஒரு விலையிலும் இருந்தது. இன்று அதில் ஒரு ஸ்திரத்தன்மை காணப்படுகின்றது. உங்கள் பொருளாதார பிரச்சினைகள் தீர்வதற்கு கொஞ்சக்காலம் எடுக்கும்.
இனி கனடா வேண்டாம்.
காணாமல் ஆக்கப்பட்ட ஒருமகன் மீண்டும் கிடைத்தது போல வட மாகாணம் எமக்கு கிடைத்துள்ளது. அதனை நாங்கள் அன்போடு பாதுகாப்போம். வடக்கை வளப்படுத்த எம்மால் முடிந்த அனைத்தையும் செய்வோம். பலாலி விமான நிலையத்தை விருத்தி செய்வோம். அங்கு கொழும்பில் இருந்து ஆட்களை வேலைக்கு அமர்த்த நாங்கள் எதிர்பார்க்கவில்லை. கைத்தொழில் பேட்டைகள் உருவாக்குவோம். அதன் பிறகு உங்களது உறவுகளுக்கு சொல்லுங்கள் கனடா சென்று பணியிலே கஷ்டப்படும் நிலை மாறும் என்று.
100 ஏக்கர் காணி விரைவில் விடுவிப்பு.
இந்த பிரதேசத்தில் இருக்கும் காணியை யுத்த தேவைகளுக்காகவும் அதற்கு பிறகும் இராணுவத்தினர் ஆக்கிரமித்துள்ளனர். பொதுமக்களின் காணிகளை அவர்களுக்கே வழங்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். கிட்டத்தட்ட 25 பகுதிகளில் 100 ஏக்கருக்கும் அதிகமான நிலங்களை விரைவில் விடுவிப்பதற்கு அடையாளம் கண்டுள்ளோம். சிலர் நினைக்கிறார்கள் தாங்கள் பிடித்த நிலங்களை அப்படியே வைத்திருக்கவேண்டும் என்று. ஏனெனில் மீண்டும் ஒரு யுத்தம் வரலாம் வந்தால் தங்களுக்கு சுலபம் என நினைக்கிறார்கள். மீண்டும் ஒரு யுத்தம் வருமா என்று உங்களிடம் கேட்கிறேன். இனிமேல் யுத்தம் வராது. நாங்கள் தேசிய சமாதானத்தை நிலை நிறுத்தும் ஒரு தேசத்தை கட்டி எழுப்புவோம்.
வடக்கில் ராஜபக்சக்கள்.
நிலங்களை விடுவிக்கும் போது தெற்கில் உள்ள இனவாதிகளுக்கு கஸ்ரமாக இருக்கும். அதேபோல வடக்கிலும் இனவாதிகள் உள்ளனர். நாலுமாதத்தில் ஒரு அப்பக்கடையை போடுவதே கடினம். நாங்கள் ஆணையிறவு உப்பு உற்பத்தியை ஆரம்பித்துள்ளோம். அதனை தொடங்கிய பின்னர் சுமந்திரனுக்கு அது பிரச்சினையாக உள்ளது. உப்பு பக்கற்றில் பெயர் பிழையாம். உப்பிலே நீங்கள் பாப்பது பெயரையா? ருசியையா?. இவ்வாறான சின்ன விடயங்களுக்காக இனவாதத்தை தூண்டும் ராஜபக்ச போன்ற சகோதரர்கள் வடக்கிலும் உள்ளனர்.
வடக்கின் பெரிய தமிழ்க்கட்சி நாங்களே.
தமிழ்க் கட்சிக்கு வாக்களிக்குமாறு இன்று சொல்கிறார்கள் இலங்கையில் உள்ள மிகப்பெரிய தமிழ்க் கட்சி தேசிய மக்கள் சக்தியே. வன்னி யாழ்ப்பாணம், நுவரெலியா, பதுளை போன்ற மாவட்டங்களில் உள்ள மிகப்பெரிய தமிழ்க் கட்சி தேசிய மக்கள் சக்தியே. சுமந்திரனுக்கான வாக்குகள் யாழில் இம்முறை கிடைக்கவில்லை. யாழ்பாணத்தில் தமிரசுக் கட்சியில் ஒருவர்கூட நாடாளுமன்றில் இல்லை. சிறிதரன் கிளிநொச்சி வாக்குகளாலே வந்தார். இலங்கையில் உள்ள பெரிய முஸ்லிம் கட்சி தேசிய மக்கள் சக்தியே. பெரிய சிங்கள கட்சியும் அதுவே.
கம்மன்பில ராஜபக்சவின் கோளையாள்.
தெற்கின் கம்மன்பில போன்றோர் வடக்கிலும் உள்ளனர். அரசியல் அநாதைகளாக உருவாகியிருக்கிறார்கள். அவர்கள் இனவாதத்தை விதைக்கிறார்கள். ஈஸ்டர் தாக்குதலில் சந்தேகத்தின் பெயரில்தான் பிள்ளையானை கைதுசெய்திருக்கிறோம். அவரை கைது செய்தவுடன் அவருக்கு தொலைபேசி அழைப்பில் கதைக்கவேண்டும் என முதலாவதாக முற்பட்டவர் யார் என்று தெரியுமா? பிள்ளையானின் மனைவி அல்ல. ரணில் விக்கிரமசிங்க. அவர்கள் இருவரும் நண்பர்கள?. ஒருபோதும் இல்லை. கம்மன்பில பிள்ளையானின் சட்டத்தரணியாக ஏன் மாறுகிறார். அவர் ராஜபக்சவின் கோளையாள். உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகளை கண்டறிய விசாரணை நடத்தப்படும் போது ராஜபக்ச ரணில் சஜித் அனைவரும் குழப்பம் அடைந்துள்ளனர். நாட்டை வளப்படுத்த முற்படும் போது கள்வர்கள் குழப்பமடைந்துள்ளனர்.
சுமந்திரனை விட யாழிற்கு பலமுறை சென்றுள்ளேன்.
ஒற்றுமையை ஏற்படுத்தும் போது இனவாதிகள் குழப்பம் அடைந்துள்ளனர். யாழில் சுமந்திரனும் கஜேந்திரகுமாரும் எமது வேட்பாளர்கள் தொடர்பாக தேவையில்லாத விடயங்களை சொல்லி வருகின்றனர். இப்படியான பொய்களை மக்கள் நம்பவேண்டாம். கிராமத்திலும் தேசிய மக்கள் சக்தி ஆட்சியை அமைப்போம். எனவே மக்கள் அர்ப்பணிப்புள்ள வேட்பாளர்களை தெரிவு செய்யவேண்டும்.
தமிழரசுக் கட்சிக்கு ஒரு ரொன் காசு வழங்கினாலும் வேலை செய்யமாட்டார்கள். வட மாகாண சபையில் நடந்தது உங்களுக்கு தெரியும். மகிந்த தெற்கிலே களவெடுத்தார். தேர்தலில் கூறுவார் சிங்கள ஜாதி சிங்கள ஜாதி என்று. சிங்கள மக்கள் வாக்களித்தார்கள். அவர் திறைசேரியை பூச்சியமாக்கினார். வடக்கிலும் அப்படி சிலர் உள்ளனர். அவர்கள் அரசியல் சோம்பேறிகள். சும்மா இருப்பார்கள் தேர்தல் காலங்களில் தமிழர் உரிமை தமிழர் உரிமை என்பார்கள். தமிழ் மக்கள் வாக்களிப்பார்கள். அவர்கள் லண்டனுக்கு போய்விடுவார்கள். இதுதானே இதுவரை காலமும் நடந்தது. சில தமிழ், முஸ்லிம் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் இங்கு தேர்தலில் போட்டியிடும் நிலையில் அவர்கள் அரசியல் சுற்றுலா பயணிகளாகவே உள்ளனர். நான் நினைக்கிறேன் சுமந்திரனை விட நான் அதிகமாக யாழ்பாணம் போயிருப்பேன் என்று. எனவே தேசிய மக்கள் சக்தி உங்களுடைய கட்சி என்றார்.